மும்பை: யுவராஜ் சிங்கை பார்த்து தோனி உள்ளிட்ட வீரர்கள் பயந்ததாக தந்தை யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான யோக்ராஜ் சிங் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கை 2017 ஆம் ஆண்டுக்குப் பின் நீடிக்காமல் போனதற்கு காரணம் யார் என்று யோக்ராஜ் சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதில் குறிப்பாக விராட் கோலி யோக்ராஜ் சிங்கிற்கு உதவ வில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்," கிரிக்கெட்டில் யாருமே நண்பர்கள் கிடையாது. பணம்,பதவி,வெற்றி, புகழ் ஆகிய தேடுதலில் யாரும் நண்பர்களாக இருக்க மாட்டார்கள். இந்த இடங்களில் முதுகில் குத்தும் நபர்களே அதிகமாக இருப்பார்கள். உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் உங்களை கீழே தள்ள பார்ப்பார்கள். யுவராஜ் சிங்கின் வெற்றியை பார்த்து பலருக்கும் பயமாக இருந்தது.
ஏனென்றால் இப்படிப்பட்ட சிறந்த வீரர் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறார். அவர் நிச்சயம் நமது இடத்திற்கெல்லாம் ஆபத்தாக வந்து விடுவார் என்று பயந்து கொண்டு இருந்தார்கள். அவ்வளவு ஏன் தோனியிலிருந்து பலருமே யுவராஜ் சிங் வளர்ச்சியை பார்த்து பயந்தார்கள். தங்களுடைய பதவிக்கு ஆபத்தாக யுவராஜ் வந்து விடுவாரா என்று அஞ்சினார்கள் என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்திருந்த யுவராஜ் சிங் உடல் நலம் காரணமாக அணியை விட்டு விலகினார். அதன்பின் பெரிய அளவு அணிக்குள் யுவராஜ் சிங் இடம்பெற்றது இல்லை. இந்த தருணத்தில் யுவராஜ் சிங் 2017 ஆம் ஆண்டு கம் பேக் கொடுத்தபோது விராட் கோலி தலைமையில் எட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
அதன் பிறகு யுவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் காரணமாக யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 402 போட்டிகளில் விளையாடிய யுவராஜ் 11178 ரன்களையும், 148 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.