சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக குணமடைந்து வருவதாக அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் வாரத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு முதற்கட்ட சிகிச்சைகளை மட்டுமே எடுத்துக் கொண்ட தோனி, காயத்துடனே ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வந்தார். விக்கெட் கீப்பிங் செய்யும் போது, பேட்டிங் செய்யும் போதும் தோனி காயத்தால் ஒட முடியாமல் அவதியடைந்தது ரசிகர்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.

இதன்பின்னர் சாம்பியன் பட்டம் வென்ற பின்னர், சென்னை கேப்டன் தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுக்க ஜூன் 1ஆம் தேதியன்றே நேரடியாக மும்பைக்கு சென்றார். சாலை விபத்தில் சிக்கிய இந்திய வீரர் ரிஷப் பண்ட் அனுமதிக்கப்பட்ட கோகிலாபென் மருத்துவமனையிலேயே தோனியும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் போது, கறுப்பு நிற டீ சர்ட் அணிந்து பகவத் கீதை வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. பிரபல மருத்துவர் தின்ஷா பர்திவாலா தான் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இந்த அறுவை சிகிச்சை முடிந்த இரு நாட்களில் தோனி சொந்த ஊர் புறப்பட்டார். இதையடுத்து தோனியின் உடல்நிலை பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சென்னை அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் தோனியின் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில், காயமடைந்திருந்த போது நாங்கள் யாரும் தோனியிடம் சென்று விளையாட முடியுமா என்று கூட கேட்கவில்லை. ஏனென்றால் தோனியால் விளையாட முடியவில்லை என்றால், நேரடியாக எங்களிடம் சொல்லிவிடுவார். இறுதிப்போட்டி முடியும் வரையில் தோனி தனது காயம் பற்றி எதையும் எங்களிடம் கூறவில்லை.
ஆனால் இறுதிப்போட்டிக்கு பின், அறுவை சிகிச்சை செய்துகொள்கிறேன் என்று எங்களிடம் கூறினார். அவரின் உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. ராஞ்சியில் இருந்து ஓய்வில் உள்ள அவர், வேகமாக குணமடைந்து வருகிறார். இன்னும் சில வாரங்கள் ஓய்வில் இருப்பார். அதன்பின்னர் மீண்டும் உடற்தகுதியை எட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.