தோனி ரொம்ப நல்லவர்.. இந்த விசயம் குறித்து அவர் என்னிடம் பேசியதே இல்லை.. இலங்கை வீரர் கருத்து
மும்பை: 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஒரே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்ட போதும், அந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து ஒருபோதும் தோனி பேசவில்லை என்று இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா பாராட்டியுள்ளார்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில், தோனி குலசேகராவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். அந்தப் போட்டியில் தோனி 79 பந்துகளில் 91* ரன்கள் குவித்து, இலங்கையின் இரண்டாவது உலகக் கோப்பை கனவைத் தகர்த்தார். 2011 மற்றும் 2012 ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையின் கீழ் குலசேகரா விளையாடினார்.

சிஎஸ்கே அணியில் தோனியுடன் விளையாடிய நினைவுகள் குறித்து பேசிய குலசேகரா, "உலகக் கோப்பை முடிந்த உடனேயே நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தேன். ஆனால், தோனி அந்த இறுதிப் போட்டியைப் பற்றி என்னிடம் ஒருமுறை கூட பேசவில்லை. அதுவே அவர் எத்தகைய மனிதர் என்பதைக் காட்டுகிறது.
அவர் மிகவும் அமைதியானவர் மற்றும் எப்போதும் தற்போதைய நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்துவார். அவரைப் பொறுத்தவரை கடந்த காலம் முடிந்துவிட்டது. அடுத்த போட்டியில் வெல்வது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. அவரது இந்த குணத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என்று கூறினார்.
"கிரிக்கெட்டில், குறிப்பாக பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் பந்துவீச்சாளர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் நடப்பது சாதாரணம்தான். நான் அவரை ஆட்டமிழக்கச் செய்ய எனது முழு முயற்சியையும் எடுத்தேன், ஆனால் அவர் சிக்ஸர் அடித்தார். இருப்பினும், அதற்குப் பிறகு 2014 டி20 உலகக் கோப்பையை நாங்கள் அதே பாணியில் வென்றது ஒரு நேர்மறையான நினைவாகும். கிரிக்கெட் என்ற அழகான விளையாட்டு இப்படித்தான் இயங்குகிறது" என்று குறிப்பிட்டார்.'
"ஒரு கட்டத்தில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று நம்பினோம். கம்பீர் கொடுத்த முக்கியமான கேட்சை நான் தவறவிட்டேன், அதற்காக எனக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பெரிய போட்டிகளில் இதுபோன்ற தருணங்கள் நடப்பது சகஜம். பென் ஸ்டோக்ஸ் கூட 2016 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இதேபோன்ற ஒரு ஏமாற்றத்தை எதிர்கொண்டார், ஆனால் பின்னர் அவர் 2019 உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார்.
இத்தகைய அனுபவங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும். மேலும், அந்த இறுதிப் போட்டியில் பனிப்பொழிவும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது என்று நான் நம்புகிறேன்" என்று குலசேகரா கூறினார்.இருப்பினும், 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கோப்பையைக் கைப்பற்றியதில் குலசேகரா முக்கியப் பங்கு வகித்து, அந்த உலகக் கோப்பை தோல்விக்கு பழிவாங்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

