மும்பை: இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கான ரேசில் இருப்பவர் கலீல் அஹ்மத். டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நடந்த ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் கலீல் அஹ்மத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், டெஸ்ட் அணியிலும் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளரை தயார் செய்ய இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் கலீல் அஹ்மத் சிறப்பாக செயல்பட்டிருப்பதால், அவருக்கு அதிகளவிலான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா உடனான உரையாடலில் கலீல் அஹ்மத் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், 2018ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் தான் இந்திய அணிக்காக அறிமுகமானேன். அப்போது ரோஹித் சர்மா காயத்தால் விலகிய போது, தோனி கேப்டன்சி மேற்கொண்டார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தான் ஒரு ஆட்டத்தில் முதல் ஓவரை வீச வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது.
எப்போது மைதானத்தில் வீரர்களுக்கான கடைசி கட்ட அறிவுரை மற்றும் திட்டங்கள் சொல்லப்படும். வழக்கமாக அந்த மீட்டிங் முடிவடைந்த பின் உடனடியாக ஃபீல்டிங் செய்ய வேண்டிய இடத்திற்கு விரைவாக ஓடி செல்வேன். அதனை தோனி கவனித்திருந்தார். அதன் காரணமாகவே அந்தப் போட்டியில் முதல் ஓவரை வீசும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவயதில் இருந்தே ஜாகீர் கானை பார்த்து தான் பவுலிங் செய்ய கற்றுக் கொண்டேன்.
அதனால் தான் முதல் ஓவரை வீச வேண்டும் என்ற ஆசை இருந்தது. தோனியை அனைவரும் நண்பர், கேப்டன், சகோதரனாக பார்ப்பதாக சொல்வார்கள். ஆனால் நான் தோனியை ஒரு குருவாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து கலீல் அஹ்மத்திற்கு ஒருமுறை பூங்கொத்து ஒன்றை பரிசாக அளித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது.
அந்த புகைப்படம் குறித்து பேசுகையில், நாங்கள் நியூசிலாந்தில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ரசிகர் ஒருவர் தோனிக்கு பூங்கொத்து கொடுத்தார்கள். அதனை அவர் என்னிடம் கொடுத்தார். அதனை ரசிகர்கள் புகைப்படம் எடுத்தனர். வாழ்வில் மறக்க முடியாத புகைப்படமாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.