சிஎஸ்கே கேப்டன்
முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என கலக்கி வருபவர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். சிறந்த கேம் பினிஷர் என்ற பாராட்டுக்குரியவர். கடந்த உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட முனைப்புடன் இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையன்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ரத்தால் கேள்விக்குறி
கடந்த 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த போட்டிகளில் விளையாடி தனது தகுதியை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் குறிப்பாக டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் என்ற தோனியின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
முன்னாள் ஆஸி வீரர் நம்பிக்கை
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தற்போது சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு வலிமையும் தகுதியும் உள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய மற்றும் சிஎஸ்கே வீரரும் தற்போதைய சிஎஸ்கே பேட்டிங் கோச்சுமான மைக்கேல் ஹஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை தோனியே தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரை போல எங்கும் கண்டதில்லை
போட்டி என்று வந்துவிட்டால் திட்டம் போட்டு காய் நகர்த்தி வெற்றியை நோக்கி நடைபோடும் வல்லமை படைத்தவர் தோனி என்றும் ஹஸ்ஸி மேலும் கூறியுள்ளார். ஒரு சமயத்தில் சிக்ஸ் வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக அதை அடிப்பார் தோனி என்றும் அவரைப் போல நம்ப முடியாத வலிமை கொண்ட வீரரை தான் இதுவரை கண்டதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இயல்புநிலை திரும்ப நேரம் பிடிக்கும்
தொடர்ந்து பேசிய ஹஸ்ஸி, சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கிரிக்கெட் போட்டிகள் சகஜ நிலைக்கு திரும்ப கால அவகாசம் பிடிக்கும் என்றும் ஹஸ்ஸி கூறியுள்ளார். போட்டிகளுக்காக செலவிடப்படும் தொகை மற்றும் போட்டிகளை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வரும்காலத்தில் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.