கொழும்பு: 42 வயதிலும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி முழுமையான ஃபிட்னஸ் உடன் இருக்கிறார் என்றும், ஏதுமறியா எனக்கு தோனியும், சிஎஸ்கேவும் அனைத்தையும் கற்றுக் கொடுத்து வருவதாக இலங்கை வீரர் பதிரானா தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா. கடந்த சீசனில் சென்னை அணியின் நிரந்தர டெத் பவுலராக மாறிய பதிரானா, தோனியின் செல்லப் பிள்ளையாகவும் மாறினார். ஒரு கட்டத்தில் ரெய்னா, ஜடேஜாவிற்கு என்ன இடம் கொடுத்தாரோ, அதே இடத்தில் பதிரானாவையும் தோனி வைத்திருந்தார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கும் ஆச்சரியம் அளித்தது. அதேபோல் தோனியின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

இதனால் சிஎஸ்கே அணிக்கான நிரந்தர வீரராக பதிராணா நிச்சயம் இருப்பார் என்று ரசிகர்களிடையே சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தோனி குறித்து பதிரானா பேசுகையில், ஒரு இளம் வீரரான எனக்கு, மனதளவில் தோனி போன்ற ஜாம்பவான் இடத்தில் இருக்கும் ஒருவர் நம்பிக்கை வைக்கும் போது, அது என் எதிர்கால பயணத்திற்கான எனர்ஜியாகவும் மாறிவிடுகிறது. அந்த நேரத்தில் என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது என்றே சொல்லலாம்.
தோனியிடம் இருந்து ஏராளமானவற்றை கற்றுக் கொண்டுள்ளேன். அதில் முதல் இடத்தில் இருப்பது அவரின் அடக்கம் தான். அதுதான் அவரின் வெற்றிக்கு காரணம் என்றே நினைக்கிறேன். தோனிக்கு 42 வயசானாலும், இன்றும் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். நான் சிஎஸ்கே அணிக்கு சென்றபோது, ஏதும் அறியா குழந்தையை போல் இருந்தேன். அங்கே யாருக்கும் என்னை தெரியாது. ஆனால் அவர்கள் என்னை புரிந்துகொண்டு பயிற்சி அளித்தார்கள்.

இப்போது டி20 போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்துள்ளேன். எப்படி என் 4 ஓவர்களை வீச வேண்டும் என்பதை கற்றுக் கொண்டுள்ளேன். தோனி என்னிடம், என் உடலை காயமடையாமல் பார்த்து கொண்டால், என்னால் பெரிய சாதனைகளை சிஎஸ்கே அணிக்காகவும், இலங்கை அணிக்காகவும் படைக்க முடியும் என்று கூறினார். அதேபோல் ஒவ்வொரு முறையும் என்னுடைய ஆக்சனில் மேம்பட விரும்புகிறேன். அதனை மேம்படுத்தியும் வருகிறேன். நான் இலங்கை அணியின் ஜாம்பவான் வீரரான மலிங்காவை சந்தித்த போது, அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் என்னை சந்தித்த போது, அவரை போன்ற ஒருவரை பார்ப்பதாக உணர்ந்தார் என்று தெரிவித்துள்ளார்.