சென்னை: ஐபிஎல் ஏலத்தின் போது அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானேவை சென்னை அணி வாங்குவதற்கு கேப்டன் எம்எஸ் தோனியே காரணம் என்று சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை சென்னை அணி கைப்பற்றியது. 5வது முறையாக சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாக அஜிங்கியா ரஹானே அமைந்தார். மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடிய ரஹானே, இறுதிப்போட்டியில் முக்கியமான நேரத்தில் இரு சிக்சர்களை விளாசி அசத்தினார்.

சென்னை அணிக்காக ஆடிய ஆட்டத்தை பார்த்து பிசிசிஐ, இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய ஃபார்மை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் வெளிப்படுத்தி ரஹானே அசத்தினார். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டால், கேப்டனாகவே ரஹானே செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தின் போது மற்ற அணிகள் யாரும் அஜிங்கியா ரஹானேவை வாங்க முன்வராத சூழலில், சென்னை அணி மட்டும் தைரியமாக கையை தூக்கி அடிப்படை விலைக்கே வாங்கியது. இதற்கு என்ன காரணம் என்று சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். அதில், ஒவ்வொரு முறையும் ஏலத்திற்கு முன்பாக தோனி எங்களுக்கு சென்னை அணிக்கு தேவையான வீரர்களை கொடுத்துவிடுவார். அதன்படி தான் நாங்கள் ஏலத்தில் செயல்படுவோம்.
அஜிங்கியா ரஹானேவை பொறுத்தவரை தோனியே அந்த முடிவை எடுத்தார். அனுபவ வீரரான ரஹானே, எந்த நேரத்தில் வாய்ப்பு கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுவார் என்று தோனியும், பிளம்மிங்கும் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை ரஹானே காப்பாற்றிவிட்டார். ஒரு வீரரின் கிரிக்கெட் செயல்பாடுகளில் சிஎஸ்கே நிர்வாகம் எப்பொதுமே தலையிட்டதில்லை. அதனை கேப்டன் மற்றும் பயிற்சிகளிடம் ஒப்படைத்துவிடுவோம்.
அம்பாதி ராயுடு ஓய்வு பெற வேண்டும் என்னிடம் கூறிய போது, தோனி மற்றும் பிளம்மிங்கிடம் கூறிய பின் முடிவை எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன். அதன்பின்னர் இருவருடனும் ராயுடு ஆலோசித்தார். அதன்பின்னரே ட்விட்டரில் முடிவை கூறினார். 2018ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு ராயுடு மற்றும் வாட்சன் மிகமுக்கியக் காரணம் என்று தெரிவித்தார்.