இந்திய அணி கேப்டனாக டோணி மட்டுமே தொடர வேண்டும்: சேப்பலுக்கு டிராவிட் பதிலடி
லண்டன்: இந்திய அணிக்கு மகேந்திரசிங் டோணிதான் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல், டோணியின் தலைமை பண்பு குறைந்துவிட்டதாக கூறி விராட் கோஹ்லியை அடுத்த கேப்டனாக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், ராகுல் டிராவிட் இந்த கருத்தை தெரிவித்தார்.

எல்லா புகழும் டோணிக்கே
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது: இந்திய அணியை முன்னணி அணியாக மாற்றியதன் பெருமை டோணியை சேரும். இப்போதும் அவர் இந்தியாவை சிறந்த அணியாக வழிநடத்த கூடிய திறமை மிக்கவர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோற்றதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் டோணியை குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

இளம் அணி
இப்போது அவரது கையில் இருப்பது மிகவும் இளம் வீரர்களை கொண்ட ஒரு அணி. அதை வைத்துக்கொண்டே இந்திய அணியை சிறப்பாக கொண்டு செல்கிறார் டோணி. இதை பாராட்டியே தீரவேண்டும்.

விராட் கோஹ்லிக்கு நேரம் வரும்
விராட் கோஹ்லி திறமையானவர்தான். ஆனால் அவருக்கும் நேரம் வரும். இப்போது அதற்கான நேரம் எழவில்லை என்று நான் கருதுகிறேன்.

பின்னி பிச்சுபுட்டாருப்பா..
ஸ்டூவர்ட் பின்னி சர்வதேச தரத்துக்கு விளையாடக்கூடியவர் என்பதை முதல் தொடரிலேயே நிரூபித்துள்ளார். பின்னி அதிக நேரம் பந்து வீசவில்லை என்று சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் அந்த மைதானத்தின் நிலைமை அதிக நேரம் பந்து வீச உகந்ததாக இல்லை என்பதே உண்மை. லாட்சில் அவருக்கான தீனி இருக்கும்.

பட்டையை கிளப்பும் லாட்ஸ்
லாட்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் இருக்கும். எனவே முதல் போட்டியை போல இல்லாமல், மேலும் விறுவிறுப்பான போட்டியாக இது அமையும். ஜடேஜாவை நீக்கிவிட்டு அஸ்வினை களமிறக்குவது தற்போதைய சூழலில் சரியாக இருக்காது. அஸ்வினுக்கு ஏற்ற சூழல் நிலவும்போது அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications