சென்னை: ஐபிஎல் 2026 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும், அவரது ஓய்வு குறித்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு இந்த விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தோனியின் எதிர்காலம் குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா சில அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்படுவார் என கூறி இருக்கிறார்.
ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய ராபின் உத்தப்பா, "மஞ்சள் ஜெர்சியில் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக 2026 இருக்கலாம். இந்த சீசனில் அவர் ஒரு வீரராக மட்டுமில்லாமல், அணிக்கு வழிகாட்டியாகச் செயல்படுவார் என்றே நான் கருதுகிறேன். அவர் 7 ஆவது வரிசையில் பேட்டிங் செய்வார் என எனக்குத் தோன்றவில்லை. அவர் 8 ஆவது இடத்திலேயே களமிறங்குவார். தான் விடைபெறும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்துள்ள அவர், படிப்படியாக தன்னை அணியில் இருந்து விலக்கிக்கொள்ளவே விரும்புவார்" என்று கூறினார்.

அணியின் கேப்டன்சி குறித்துப் பேசிய உத்தப்பா, "சஞ்சு சாம்சன் அணிக்கு வந்திருப்பதால் சிஎஸ்கே நிர்வாகம் உடனடியாக கேப்டன் பதவியை அவரிடம் ஒப்படைக்கக் கூடாது. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கூடுதல் நேரம் கொடுக்க வேண்டும். அவர் 2024 முதல் அணியை வழிநடத்தி வருகிறார். மக்கள் என்ன கூறினாலும், அவர் தோனியின் நிழலிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறார்.
தோனியின் மிகப்பெரிய ஆளுமையின் கீழ் இல்லாமல், அவர் சுயமாக முடிவெடுத்து அணியை எப்படி வழிநடத்துகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காகவே தோனி அணி நிர்வாகத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பார் என நினைக்கிறேன். அதன்பிறகுதான் ருதுராஜின் உண்மையான திறமை வெளிப்படும். ஒருவேளை சில ஆண்டுகளுக்குப் பிறகும் ருதுராஜ் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், கேப்டன் பொறுப்பை ஏற்க சஞ்சு சாம்சன் அணியில் எப்போதுமே இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வரும் மார்ச் 30 அன்று கவுகாத்தியில் நடைபெறும் தனது முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் தோனி களமிறங்குவதைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி படுமோசமாக ஆடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஆனால், இந்த ஆண்டு பல அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற அனுபவ வீரரையும் தேர்வு செய்து சிறந்த அணியுடன் களமிறங்க உள்ளது.
