என்னைப் போல யாராச்சும் இருந்தா சொல்லுங்க பார்ப்போம்.. கேட்கிறார் டோணி
டெல்லி: இப்போதைக்கு இந்திய அணியில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிக்கும் தலைமை தாங்கக் கூடிய அனுபவம் உடைய வீரர்கள் வேறு யாரும் இல்லை. எனவே அடுத்த உலகக் கோப்பைப் போட்டி வரை வேறு புதிய வீரருக்கு கேப்டன் பதவியைத் தருவது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.
இதன் மூலம் வருகிற உலகக் கோப்பை வரைக்கும் தானே டுவென்டி டுவென்டி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்வதை விரும்புவதாக மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் டோணி.
தென் ஆப்பிரிக்கத் தோல்விக்குப் பின்னர் டோணியை சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அவருக்கு சரியான பதிலடி பதிலைக் கொடுத்திருந்தார் டோணி. இந்த நிலையில் தானே கேப்டனாக தொடர விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புது வீரரைக் கேப்டனாக்கினால் நல்லாவா இருக்கும்
உலகக் கோப்பைப் போட்டிக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்த நிலையில் புதிய வீரர் ஒருவரிடம் கேப்டன் பதவியைக் கொடுத்தால் அது நியாயமாக இருக்காது.

90 போட்டியிலாவது விளையாடியிருக்க வேண்டாமா
ஒரு வீரர் குறைந்தது 70 முதல் 90 போட்டியிலாவது விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரிடம்தான் உலகக் கோப்பைப் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை தருவது சரியாக இருக்கும்.

நெருக்கடி இருக்கத்தான் செய்யும்
கேப்டனாக இருந்தால் நிச்சயம் நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்யும். அதை சமாளித்து விளையாடப் பழக வேண்டும். அதேசமயம், அனுபவமும் வேண்டும்தானே. எனவே அதைத்தான் தற்போது நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

எனது அனுபவம் கை கொடுக்கும்
தற்போதைய நிலையில் இந்திய அணியில் நிறைய அனுபவம் உள்ள வீரராக நான் மட்டுமே இருக்கிறேன். எனவே எல்லா பார்மட்டிலும் நானே கேப்டனாக விளையாடுவது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

நல்லாத்தானே இருக்கேன்
நான் நல்ல உடல் நலத்துடன், பிட்டாகத்தான் இருக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம். இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. உடலை ஒருங்கிணைத்து விளையாட முடிகிறது. எதிர்காலத்தில் எப்படி என்று தெரியாது. ஆனால் இப்போது நான் பிட்டாக இருக்கிறேன் என்று தைரியமாக சொல்ல முடியும்.

கஷ்டம் வரத்தாய்யா செய்யும்
இடையில் சில தோல்விகளை நாம் சந்தித்தோம். இல்லை என்று கூறவில்லை. கஷ்டம் வரத்தான் செய்யும். சில தொடர்கள் நமக்கு சாதகமாக இல்லை. இருப்பினும் தென் ஆப்பிரிக்க தொடரில் நமது நல்ல விஷயங்களையும் நாம் பார்க்க வேண்டும். நான் எப்போதும் பாசிட்டிவாகத்தான் பார்ப்பேன். நமது வீரர்கள் பலர் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதை நாம் மறந்து விடக் கூடாது என்றார் அவர்.

உலகக் கோப்பைப் போட்டியின்போது டோணிக்கு 33 வயது
அடுத்த உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்தவுள்ளன. அந்தப் போட்டித் தொடரின்போது டோணிக்கு 33 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications