
கான்பூரில் எதிர்பாராத தோல்வி
கான்பூர் முதல் போட்டியில் 304 ரன்களைத் துரத்தி வந்த இந்தியா வெற்றியை நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்று விட்டது.

பினிஷிங் சரியில்லையேப்பா
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து கேப்டன் டோணியை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். அவரிடம் பினிஷிங் சரியில்லை என்று வர்ணிக்க ஆரம்பித்து விட்டனர். தனது அணியின் தோல்விக்கு தானே பொறுப்பு என்று பெருந்தன்மையாக டோணியும் ஏற்றுக் கொண்டு விட்டார்.

ஹோல்கர் ஸ்டேடியத்தின் மகிமை
போட்டி நடக்கவுள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு 3 போட்டிகளில் மோதியுள்ளது இந்தியா. மூன்றிலுமே நமக்குத்தான் வெற்றி. அதில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தையும், ஒரு போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளையும் இந்தியா வென்றுள்ளது.

3வது இடத்தில் கோஹ்லி வர வேண்டும்
இந்தப் போட்டியில் இந்தியா சிலவற்றை கண்டிப்பாக செய்தாக வேண்டும். குறிப்பாக விரோத் கோஹ்லி 3வது இடத்தில் மீண்டும் விளையாட வேண்டும். கான்பூர் போட்டியில் ரஹானேவை அணியில் சேர்த்து 3வது இடத்தில் ஆட வைத்தார் டோணி. ஆனால் நாளைய போட்டியில் இதை அவர் செய்யக் கூடாது. மாறாக கோஹ்லிதான் 3வது இடத்தில் ஆட வேண்டும். கான்பூர் போட்டியில் 4வது இடத்தில் இறங்கி சோபிக்காமல் போனார் கோஹ்லி.

தவானை நீக்கி விட்டு... ரஹானே ஓப்பனிங்கில் இறங்க வேண்டும்
ஷிகர் தவான் நல்ல பார்மில் இல்லை. அவரை நீக்க விட்டு பதிலாக ரஹானேவே சேர்த்து, அவரையும், ரோஹித் சர்மாவையும் ஓப்பனிங்கில் இறக்க வேண்டும். தவானுக்கு பிரேக் கொடுக்கலாம். ரஹானேவுக்கு ஓப்பனிங் ஸ்லாட் அபாரமாக செட் ஆகும். மேலும் ரோஹித்துடன் நல்ல புரிந்துணர்வு கொண்டவர் அவர்.

கடைசி நேரத்தில் சரியாக பந்து வீச வேண்டும்
கடைசி ஓவர்களில் இந்தியாவின் பந்து வீச்சு கேவலமாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். கான்பூர் போட்டியில் கடைசி 6 ஓவர்களில் மட்டும் 86 ரன்களை வாரிக் கொடுத்தனர் நமது வீரர்கள். அதை நிறுத்த வேண்டும். கடைசி நேரத்தில் இறுக்கமாக பந்து வீச வேண்டும்.

பின்னியைத் தூக்கிரலாம்
கான்பூர் போட்டியில் ஸ்டூவர்ட் பின்னியை நையப்புடைத்து விட்டனர் தென் ஆப்பிரிக்கர்கள். 8 ஓவர் வீசிய அவர் விக்கெட் எடுக்கவில்லை. மாறாக 63 ரன்களை வாரிக் கொடுத்து விட்டார். அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதில் அம்பட்டி ராயுடு அல்லது மோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும்.

குர்கீரத் சிங்கை சேர்க்க வேண்டும்
ஆல் ரவுண்டர் குர்கீரத் சிங் மான் அணியில் சேர்க்கப்பட வேண்டும். அவர் இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஜொலித்தவர். ஆப் ஸ்பின்னும் நன்றாகப் போடுவார். தவானுக்குப் பதில் அவரைச் சேர்க்கலாம்.
இதெல்லாம் செய்தால் சற்று நம்பிக்கையுடன் போட்டியைச் சந்திக்க வசதியாக இருக்கும்... யோசிப்பாரா டோணி?


Click it and Unblock the Notifications











