மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து வீரர்களுக்கும் தற்போது காட் பாதர் போல் விளங்குகிறார் மகேந்திர சிங் தோனி. இளம் வீரர்கள் தங்களுக்கு கிரிக்கெட் குறித்து எந்த சந்தேகம் இருந்தாலும் அதனை தோனியிடம் தான் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனுக்கு தோனி சொன்ன அட்வைஸ். அவருடைய வாழ்க்கையே மாற்றி இருக்கிறது.

ஐபிஎல், டிஎன்பிஎல் என தற்போது இந்திய அணி வரைக்கும் சாய் சுதர்சன் வந்திருக்கிறார். இந்திய அணியின் எதிர்காலத்தில் சிறந்த வீரராக சாய் சுதர்சன் இருப்பார் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இளையோருக்கான ஆசிய கோப்பை தொடரில் சாய் சுதர்சன் சதம் அடித்த அசத்தி இருக்கிறார்.
இந்த சமயத்தில் சாய் சுதர்சன் தோனியிடம் கிரிக்கெட் தொடர்பாக அறிவுரை கேட்டிருக்கிறார். இதுகுறித்து பேசிய சாய் சுதர்சன் தோனி பாய் குறித்து அனைவருக்குமே தெரியும். பரபரப்பான சூழலில் அவர் எப்படி அமைதியாக இருப்பார் என்று எனக்கு தெரியும். எனக்கு கிரிக்கெட் குறித்து இருந்த சந்தேகங்கள் எல்லாம் நான் அவரிடம் பேசி இருக்கிறேன்.
அதற்கு அவர் எப்போதுமே ஒன்றே ஒன்றை தான் சொல்லுவார். உன்னைப்பற்றி நீயே அறிந்து கொள். அதன் பிறகு உன் அணிக்கு உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள். இதை நீ சரியாக செய்தாலே நீ மற்றவர்கள் போல் இருப்பதைவிட உனக்கு என்ன தெரியுமோ அதை சிறப்பாக செய்வாய் என்று தோனி தமக்கு அட்வைஸ் கூறியதாக கூறினார்.
இதனைத் தான் தற்போது பின் தொடர்ந்து வருவதாக கூறினார். இதேபோன்று விராட் கோலி இடமும் தான் சில விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதாக சாய் சுதர்சன் கூறியுள்ளார். விராட் கோலி மனதளவில் மிகவும் பலமான வீரராக இருக்கிறார். அதை அவர் எப்படி செயல்படுத்துகிறார் என்பதை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது தொடர்பாக நான் அவரிடமும் பேசி இருக்கிறேன் என்று சாய் சுதர்சன் கூறியுள்ளார். தற்பொழுது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாய் சுதர்சன் இடம்பெற்றிருக்கிறார்.