“தோனி ஆடப் போகிறார் ஆனால்..” கதிகலங்க வைத்த அஸ்வின்.. சேப்பாக்கத்தில் கடைசி போட்டி.. அத்துடன் ஓய்வு?
சென்னை: 2026 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தோனியின் ஆட்டம், மே 18 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அந்தப் போட்டி, தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடும் முதல் போட்டியாக மட்டுமின்றி, ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சீசன் தொடங்கியது முதல் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, நாளை மறுதினம் (மே 18) ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்க 'அதிக வாய்ப்பு' இருப்பதாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அஸ்வின், "தோனி கடந்த 2 முதல் 3 போட்டிகளாகவே விளையாடும் அளவிற்குத் தயாராக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடப் பலமான வாய்ப்புகள் உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பயிற்சியின் போது தோனிக்குக் கெண்டைக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. வெறும் 2 வாரங்களில் அவர் சரியாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 2 மாதங்களாக அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அணியின் ஆலோசகர் போலச் செயல்பட்டு வந்த தோனி, தற்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில், தோனி பேட்டிங் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓடி ரன்களை எடுப்பதில் மட்டும் சிறிய சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஏன் இந்தப் போட்டி முக்கியம்?
சிஎஸ்கே அணி முந்தைய போட்டியில் லக்னோவிடம் தோல்வியடைந்ததால், பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க இனி வரும் 2 போட்டிகளிலும் வென்றே தீர வேண்டும். இக்கட்டான இந்தச் சூழலில், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்கத் தோனி போன்ற ஒரு அனுபவ வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார்.
மேலும், மே 18-ம் தேதி நடைபெற உள்ள இந்தப் போட்டி தான் இந்தச் சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் ஆட்டமாகும். ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினால், இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாகவும் அமைய வாய்ப்புள்ளது. இதனால், தனது விருப்ப மைதானமான சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு விடை கொடுக்கும் வகையில் தோனி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் கொடுத்துள்ள இந்த 'க்ளு' சென்னை ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications
