Dhoni: “தோனி எப்போதுதான் ஆடுவார்? உடைந்து போன ரசிகர்கள்.. நம்பிக்கை அளித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோனி விளையாடவில்லை. டாஸ் நிகழ்வின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த அறிவிப்பை வெளியிட்டது, தோனியைப் பார்க்க காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
2026 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் கடைசிப் போட்டி இதுவாகும். கடந்த சில நாட்களாக தோனி சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் பரவியதால், அவர் இன்று நிச்சயம் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து டாஸ் நிகழ்வின் போது பேசிய ருதுராஜ், "தோனி இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை. எனவே அவர் இன்று விளையாடவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால், அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது" என்று ஒரு தகவலைப் பகிர்ந்தார்.

பிளே-ஆப் நெருக்கடி
தற்போது 12 புள்ளிகளுடன் உள்ள சிஎஸ்கே அணிக்கு, பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற இன்னும் 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும். ஒருவேளை சிஎஸ்கே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வென்றுவிட்டால், பிளே-ஆப் வாய்ப்பு ஓரளவுக்கு உறுதியாகும். அந்தச் சூழலில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெறும் கடைசிப் போட்டியில் தோனி களம் காணக்கூடும் எனத் தெரிகிறது.
அணி சமநிலை
கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 மிகவும் வலுவாகவும் சமநிலையாகவும் உள்ளது. கடந்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றிருப்பதால், தோனி உள்ளே வருவது அணியின் கட்டமைப்பைப் பாதிக்குமா என்ற விவாதமும் கிரிக்கெட் நிபுணர்களிடையே இருந்தது. ருதுராஜ் குறிப்பிட்டது போல, இந்தப் போட்டியில் வெற்றி உறுதியானால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து தோனியின் வருகை இறுதி செய்யப்படும்.
சேப்பாக்கத்தில் தோனியைப் பார்க்க முடியாவிட்டாலும், அகமதாபாத் போட்டியில் அவர் விளையாடுவார் என்ற ருதுராஜின் சூசகமான பதில் ரசிகர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications
