மும்பை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை இடையிலான ரைவல்ரி குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசி இருக்கிறார். அதில் சிஎஸ்கே அணியை ஆதிக்கம் செலுத்துவதற்கு மும்பை அணி ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான பணிகளை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை இடையிலான போட்டியை ரசிகர்கள் எல்-கிளாசிக்கோ என்று கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் இரு அணிகளும் வெற்றிக்காக கடைசி பந்து வரை தீவிரமாக போராடும் என்பதால், பரபரப்பும் பதற்றமும் எகிறிக் கொண்டே இருக்கும். 2020ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணியை மும்பை அணி ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்ல முடியும்.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சிஎஸ்கே மாஸ் காட்டி வருகிறது. இருந்தாலும் இருவருக்கும் இடையிலான 37 போட்டிகளில் மும்பை அணி 20 போட்டிகளிலும், சிஎஸ்கே அணி 17 போட்டிகளிலும் வென்றுள்ளன. இந்த நிலையில் மும்பை மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய ஹர்பஜன் சிங், எல்-கிளாசிக்கோ போட்டிகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில் ஹர்பஜன் சிங் பேசுகையில், மும்பை அணிக்கு எதிரான தோனி புதிய புதிய யுக்திகளுடன் களமிறங்குவார். களத்தில் ஏராளமான மாற்றங்களை, அடிப்படைகளையும் பின்பற்றுவார். ஆனால் தோனியின் யுக்திகளை கையாள்வதற்காக மும்பை அணி தீவிரமாக பணியாற்றும். அழுத்தமான நேரங்களில் மும்பை அணி தான் சிறப்பாக செயல்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி சில சொதப்பல்களை செய்துள்ளது.
இறுதிப்போட்டியில் மும்பை அணியிடம் 3 முறை சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. நான் மும்பை அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு வந்த போது, ரசிகர்களிடம் இருந்து அதிகளவிலான அன்பை பெற்றேன். சிறப்பாக பவுலிங் செய்தேன். அதேபோல் சாம்பியன் பட்டம் வென்றோம், ரன்னர்-அப் பதக்கமும் வென்றோம். ஆனால் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தில் 2018ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியை மறக்க முடியாது.
ஏனென்றால் திடீரென சிஎஸ்கே அணிக்காக பிராவோ களமிறங்கி 30 பந்துகளில் 68 ரன்களை விளாசி ஆச்சரியம் கொடுத்தார். கடைசி நேரத்தில் வந்த கேதர் ஜாதவ் அபாரமாக விளையாடி வெற்றி பெற வைத்தார். இல்லையென்றால் அந்த போட்டியில் மும்பை அணியின் கைகளே ஓங்கி இருந்தது. தோனியை வீழ்த்த வேண்டும் என்றால், கடினமாக விளையாடி அறிவை பயன்படுத்த வேண்டும். அது சாதாரண விஷயம் கிடையாது.
மும்பை அணியிடம் சிறந்த வீரர்கள் இருந்ததால், அவர்களால் வெல்ல முடிந்தது. அதேபோல் சிறந்த திட்டத்துடன் களத்திற்கு வருவார்கள். அதுமட்டுமல்லாமல் தோனி, ரோஹித் சர்மாவை ஒப்பிட தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் சிறந்த கேப்டன் என்பவர், ஒரு அணிக்கு ஊக்கமாக இருக்க வேண்டும். இருவருமே வெற்றிக்கான ஊக்கத்தை சக வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அளித்துள்ளனர்.
சாதனைகள் பற்றி பேசினால், தோனி செய்ததற்கு ரோஹித் சர்மா செய்துள்ளது எந்த வகையிலும் குறைந்ததல்ல. கங்குலி, தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா என்று அத்தனை கேப்டன்களும் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள். அவர்கள் இடையிலே போட்டி போட்டு முன்னேறினார்கள் என்று தெரிவித்துள்ளார்.