மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல், யுவராஜ் சிங்கின் நீக்கம் மற்றும் கௌதம் கம்பீர் உடனான மனக்கசப்பு குறித்துப் பல முக்கியமான தகவல்களைச் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிதான் அழித்துவிட்டார் என அவரது தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
தோனியைத் தன் வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன் என்றும் அவர் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என சந்தீப் பாட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய சந்தீப் பாட்டீல், தேர்வுக்குழு கூட்டத்திலோ, சுற்றுப்பயணத்தின் போதோ அல்லது போட்டிகளின் போதோ யுவராஜ் சிங்கை அணியில் இருந்து நீக்குமாறு தோனி ஒருமுறை கூட சொன்னது கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அணியைத் தேர்வு செய்யும் குழுவின் மீது தோனி முழு நம்பிக்கை வைத்திருந்தார் என்றும், எந்த முடிவிலும் அவர் தலையிட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு தந்தையாக யோக்ராஜ் சிங் தன் மகன் மீது பாசம் வைப்பது இயல்புதான். ஆனால், அதற்காகத் தவறான நபர் மீது அவர் பழியைப் போடுகிறார் எனப் பாட்டீல் தெளிவுபடுத்தினார்.

அதே பேட்டியில், தற்போதைய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்தும் அவர் பேசினார். சந்தீப் பாட்டீல் தேர்வுக்குழு தலைவராக இருந்த போதுதான் ஷிகர் தவானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, கம்பீர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு முன்பு வரை தன்னிடம் மிகவும் நெருக்கமாகப் பழகிய கம்பீர், அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தன்னிடம் பேசுவதையே முழுமையாக நிறுத்திவிட்டார் எனப் பாட்டீல் தெரிவித்தார்.

ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்றாலும் கம்பீர் தனது முகத்தைக் கூட பார்ப்பதில்லை என்றும், தான் வணக்கம் சொன்னாலும் அவர் பதில் அளிப்பதில்லை என்றும் அவர் கூறினார். கம்பீர் எதையும் எளிதில் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்; ஆனாலும் அவர் மீது தனக்கு எப்போதும் மரியாதை உண்டு என சந்தீப் பாட்டீல் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார்.