டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பிறந்தநாள் இன்னும் 2 நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னாள் வீரர்கள் பலரும் தோனி குறித்து பல்வேறு நேர்காணல்களிலும் பதில் அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இஷாந்த் சர்மா - எம்எஸ் தோனி இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருபவர்கள். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், ஜாகீர் கானை அடுத்து இஷாந்த் சர்மா மட்டுமே நம்பிக்கையான வேகப்பந்துவீச்சாளராக இருந்தார். இதனால் தோனிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் இஷாந்த் சர்மாவின் கைகளில் பந்தை கொடுப்பார்.

அந்த அளவிற்கு இஷாந்த் சர்மா மீது தோனி நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வெற்றிபெற இஷாந்த் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார். இந்த நிலையில் கேப்டன் கூல், கூல் ஹெட் என்று கொண்டாடப்படும் எம்எஸ் தோனியின் இன்னொரு முகத்தை பற்றி இஷாந்த் சர்மா சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது தோனி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஷாந்த் சர்மா பேசுகையில், எம்எஸ் தோனிக்கு ஏராளமான பலம் உள்ளது. ஆனால் நிச்சயம் அமைதியும், கூலாக இருப்பதும் அவரின் பலம் கிடையாது. ஏனென்றால் களத்தில் இருக்கும் போது அவ்வளவு கெட்டவார்த்தைகளை பேசுவார். நானே அவ்வளவு கேட்டிருக்கிறேன்.
அதேபோல் தோனியுடன் எப்போதும் யாராவது ஒரு வீரர் அமர்ந்திருப்பார். அவருடன் உட்கார்ந்திருக்கும் போது சொந்த கிராமத்தில் இருப்பது போல் தோன்ற வைத்துவிடுவார். அதேபோல் தோனி பெரும்பாலான நேரங்களில் கோபத்தை வெளிக்காட்ட மாட்டார். ஒருமுறை பவுண்டரி லைனில் இருந்து நான் த்ரோ செய்த போது, அவரின் கைகளுக்கு சரியாக சென்று சேரவில்லை. இதனால் கோபமடைந்தார் என்று தெரிவித்தார்.