அமெரிக்காவில் சித்திவிநாயகரை மனைவியுடன் தரிசித்த டோணி
நியூஜெர்சி: அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் சித்திவிநாயகர் கோவிலில் கிரிக்கெட் வீரர் டோணி, தனது மனைவி சாக்ஷியுடன் பிரார்த்தனை செய்தார்.
கிரிக்கெட் வீரர் டோணி தனது மனைவி சாக்ஷியுடன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நியூஜெர்சியில் கட்டப்பட்டு வரும் சித்திவிநாயகர் கோவிலுக்கு மனைவி மற்றும் ஜார்க்கண்டா மாநில முன்னாள் துணை முதல்வர் சுதேஷ் குமார் மஹதோ ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று பிரார்த்தனை செய்தார்.
டோணிக்கு அங்கு வசிக்கும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

செல்ஃபி
பல இந்தியர்கள் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். டோணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 150 முதல் 200 பேர் கலந்து கொண்டனர். சிறுவர், சிறுமியர் நடனம் ஆடி டோணியை மகிழ்வித்தனர். இந்தியர்கள் மத்தியில் டோணி உரை நிகழ்த்தினார்.

ஆதரவு
இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். நம் அணி நல்ல அணி. அணியில் தற்போது பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. உங்கள் ஆதரவுடன் நாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவோம் என்று டோணி கூறினார்.

அமெரிக்கா
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வந்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் இந்நாட்டு கலாச்சாரத்துடன் நம் நாட்டு பாரம்பரியத்தையும் விட்டுக் கொடுக்காமல் உள்ள உங்களை பாராட்டுகிறேன் என்று டோணி தெரிவித்தார்.

கிரிக்கெட்
வழக்கமாக நான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாடுகளுக்கு செல்வேன். தற்போது தான் போட்டி சம்பந்தம் இல்லாத இடத்திற்கு வந்துள்ளேன் என்றார் டோணி.


Click it and Unblock the Notifications