டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோணி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கேப்டன் பொறுப்பில் இருந்து டோணி விலகினாலும் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் டோணி இடம்பெறுவார் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது.

இதுவரை 199 ஒருநாள் போட்டி, 72 டி20 போட்டிகளில் டோணி இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். 199 ஒருநாள் போட்டிகளில் டோணி தலைமையில் பங்கேற்ற இந்திய அணி 110 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதில் 74 போட்டிகளில் மட்டும் தோல்வியுற்றுள்ளது. அதேபோல் டி20 போட்டிகளில் முத்திரை படைத்த டோணி தலைமையிலான அணி 72 போட்டிகளில் பங்கெடுத்து 41 போட்டிகளில் வென்று, 28 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
கேப்டனாக பல சாதனைகளை நிகழ்த்திய டோணி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து விராட் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோணி தற்போது விலகி உள்ளார்.
டோணியின் அறிவிப்பைத் தொடர்ந்து புதிய கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. டோணியின் திடீர் விலகல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.