சென்னை: முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீப் தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும், 2019 உலகக்கோப்பையிலேயே அவரால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை என அதிரடியாக பேசி இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் தோனி கடந்த சில போட்டிகளில் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என பரவலாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அது பற்றி பேசிய ரஷீத் லத்தீப் "35 வயதில் ஒரு விக்கெட் கீப்பர் ஓய்வு பெற்றுவிட வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

ரஷீத் லத்தீப்பும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி பற்றி அவர் பேசியதாவது: "தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விக்கெட் கீப்பருடைய வயது 35 தான். அதற்கு நானே ஒரு உதாரணம். நான் ஒரு வீரராக விளையாடும்போது உச்சகட்டத்தில் விளையாடவில்லை என்றால் எனது மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்திக்கும்."
"நீங்கள் 15 ஆண்டுகாலம் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இளம் தலைமுறையினர் உங்களைப் பார்த்து ஈர்க்கப்பட மாட்டார்கள். 2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அவர்கள் அப்போதே அதை புரிந்து கொண்டிருக்க வேண்டும்."
"ஒரு வீரருக்காக ஒரு அணியை விடுவது என்பது இந்த விளையாட்டுக்கு செய்யும் அநீதியாகும். அப்படி செய்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருக்கும். நான் இரண்டு, மூன்று சிஎஸ்கே போட்டிகளை பார்த்தேன். தோனி வரும்போது மிகப் பெரிய சத்தம் எழுந்தது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு இப்போது புள்ளிகள் தான் முக்கியம்."
"அவர்கள் (சிஎஸ்கே) புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் தான் இது நடக்கிறது என்றால் நீங்கள் இந்த நேரத்தில் என்ன அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என தோனியை ஓய்வு பெற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார் ரஷீத் லத்தீப்.