சென்னை: 2025 ஐபிஎல் தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே சமயம் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியதில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ருதுராஜுக்கு முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதை அடுத்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஏப்ரல் 10 அன்று இந்த மாற்றத்தை உறுதி செய்திருக்கிறார். 28 வயதாகும் ருதுராஜ் கெய்க்வாட் மார்ச் 30 அன்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சை சந்தித்தபோதும் முழங்கையில் காயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். ஆனால் தற்போது அவரது காயம் தீவிரமானதாக இருப்பதாகவும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார். ஏற்கனவே, 2022 ஐபிஎல் தொடரிலும் இதே போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டன. அப்போதும் முதல் பாதியில் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போதும் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. அதன் பின் இரண்டாவது பாதியில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
அதுபோன்ற ஒரு விஷயம்தான் இப்போது நடைபெற்று இருக்கிறதா? அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு உண்மையாகவே காயம் ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும், தோனி மீண்டும் கேப்டனாக இருப்பதை அறிந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.