மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்க தயாராகி வருகிறார். 44 வயதில், புத்துணர்ச்சி பெற பைக் ஓட்டுதல், பேட்மிண்டன், பேடல் விளையாட்டுகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் இளம் வயதிலேயே பல்வேறு விளையாட்டுகளை ஆராய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தனியார் நிறுவனத்தில் மாணவர் உரையாடல் தொடரில் பங்கேற்ற தோனி, "சுவிட்ச் ஆன் மற்றும் சுவிட்ச் ஆஃப் செய்வது மிக முக்கியம். எனக்கு, பைக்குகளை ஓட்டுவது அல்லது பேட்மிண்டன், பேடல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது தமக்கு ரீசார்ஜ் செய்ய உதவுகிறது," என்றார்.

"மாணவர்கள் இளம் வயதிலேயே வெவ்வேறு விளையாட்டுகளை ஆராய வேண்டும், ஏனென்றால் நீங்கள் முயற்சி செய்யாவிட்டால், எதில் உங்களுக்கு இயற்கையாகவே ஆர்வம் உள்ளது என்று ஒருபோதும் தெரியாது," என்று விளக்கினார். தோனி, தனது வீட்டில் பல்வேறு பைக், சொகுசு கார்களை வைத்துள்ளார். மேலும், தோனிக்கு டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். கோலி போன்ற வீரர்கள் வெளிநாட்டுக்கு செல்லும் நிலையில், தோனி இன்னும் ராஞ்சியிலேயே தங்கி வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான தோனி இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பார் என சமீபத்தில் உறுதிப்படுத்தினார். "என் கணிப்புப்படி, அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்," என்று காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேதேஷ்வர் புஜாரா, ஐபிஎல் 2026ல் எம்.எஸ். தோனி பேட்டிங் வரிசையில் மேலே வரவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். தோனி கடந்த சீசன்களில் ஏழாவது அல்லது அதற்கும் கீழ் ஆர்டரில் பேட் செய்ததை புஜாரா சுட்டிக்காட்டி, 8 அல்லது 9வது இடத்தில் விளையாடுவதில் அர்த்தமில்லை என்று குறிப்பிட்டார்.