பிரிஸ்பேன்: 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கை நன்றாக ஓங்கி அதே வேகத்தில் டமாரென்று சரிந்து போன அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அந்த "டமாருக்கு" பல காரணங்கள் இருக்கு பாஸ் என்று கூறி காரணங்களையும் பட்டியல் இட்டுள்ளார் கேப்டன் டோணி.
முன்பெல்லாம் பிட்ச் சரியில்லை, வெதர் சரியில்லை, வெஞ்சனம் சரியில்லை, நடுவர் சரியில்லை, நாடு சரியில்லை என்று தோல்விகளுக்கு சிம்பிளாக ஏதாவது காரணத்தைச் சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் நம்மவர்கள்.

ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே "முதல் முறையாக" கேப்டன் டோணி 10 காரணங்கள் இருக்கிறது என்று கூறி அவற்றை வரிசையாக வரிசைப்படுத்தி அசத்தியுள்ளார்.!
பிரிஸ்பேனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நன்றாகவே விளையாடியது. முரளி விஜய் அழகான சதம் அடித்தார். ஆனால் பின்னால் வந்தவர்கள் சொதப்பினர். இருப்பினும் 400க்கு மேல் ரன்களைக் குவித்தது இந்தியா. ஆனால் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா பிரமாதமாக ஆடி நல்ல லீட் எடுத்து விட்டது.
அதன் பின்னர் இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடி வந்த நிலையில் பெரும் குழப்பங்கள் நடந்தேறி விட்டன. இதனால் 224 ரன்களுக்கு சுருண்டு போனது இந்தியா. இந்த எதிர்பாராத திருப்பத்தால் 128 ரன்கள் எடுத்தால் போதும் என்ற சிம்பிளான இலக்குடன் ஆஸ்திரேலிய அணியினர் அடித்து நொறுக்கி போட்டியிலும் வென்று விட்டனர்.
தற்போது 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறது ஆஸ்திரேலியா. 3வது போட்டி மல்போர்ன் நகரில் 26ம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், பிரிஸ்பேன் தோல்விக்கான காரணத்தை சொல்லியுள்ளார் டோணி. அதில் 10 முக்கியமான காரணங்கள்....
1. ஷிகர் தவன் காயமடைந்தது தொடர்பாக டிரஸ்ஸிங் ரூமில் ஏற்பட்ட குழப்பம், அசாதாரண சூழல்.
2. 4வது நாள் ஆட்டத் தொடக்கத்திற்கு முன்பாக தவனுக்கு ஏற்பட்ட காயம்.
3. மோசமான பிராக்டிஸ் பிட்ச் காரணமாக தவன் காயமடைந்தது.
4. 4வது நாள் ஆட்டத்தின்போது 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது சரியான பார்ட்னர்ஷிப் ஏற்படாமல் போனது.
5. 4வது நாள் ஆட்டத்தின்போது முதல் பாதி ஆட்டத்தில் நாம் பிரகாசிக்காமல் போனது.
6. 5வது நாள் ஆட்டம் வரை போட்டி நீடிக்காமல் போக விட்டது.
7. 5வது நாள் ஆட்டம் வரை போயிருந்தால் வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு நாம் ஏதாவது செய்திருக்கலாம்.
8. மிட்சல் ஜான்சன் 88 ரன்களைக் குவித்தது. இந்தியாவின் 2வது இன்னிங்ஸின்போது அவர் முக்கியமான விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது.
9. ஜான்சன் அடித்த பல பந்துகள் கேட்ச் ஆகும் நிலை இருந்தபோதும் ஷார்ட்டாக வந்து விழுந்ததால் நம்மால் பிடிக்க முடியாமல் போனது.
10. நடுவர்களின் தீர்ப்பும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
இது டோணி சொல்லும் காரணங்கள்.. உங்களுக்கு வேறு காரணம் ஏதாவது தோன்றுகிறதா...?