சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத தோனி
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியுற்றதையடுத்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கு பின்பு அவருக்கு இந்திய அணியில் இணைய மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தற்போது காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹர்பஜன் -ரோகித் சர்மா பேச்சு
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன், ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடி, பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தோனி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து
இந்நிலையில், தோனி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஹர்பஜன் சிங், இனி இந்திய அணியின் நீலநிற ஜெர்சியை போட்டுக்கொண்டு அணிக்காக எம்எஸ் தோனி விளையாட மாட்டார் என்று தான் கருதுவதாக கூறியுள்ளார். உலக கோப்பை அரையிறுதியே தன்னுடைய இறுதிப்போட்டி என தோனி தீர்மானித்துவிட்டதாகவும், ஆனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
70% போட்டிகள் தோல்வி
தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி மற்றும் துவக்க வீரர் ரோகித் சர்மாவை நம்பியே அணி உள்ளதாகவும், அவர்கள் சரியாக விளையாடாத 70 சதவிகித போட்டிகளில் அணி தோல்வியையே அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.