அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சமாளிக்க டென்னிஸ் ராக்கெட்டுடன் பயிற்சிக்கு வந்த டோணி!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள டென்னிஸ் ராக்கெட்டுடன், பயிற்சிக்கு வந்துள்ளார் இந்திய கேப்டன் டோணி.
மார்ச் 26ம்தேதி, உலக கோப்பையின் 2வது அரையிறுதியில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், சிட்னி மைதானத்தில் பலப் பரிட்சை நடத்த உள்ளன. சொந்த ஊர் கிரவுண்ட் என்பதால், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள், இந்திய அணியை அச்சுறுத்தும் பவுன்சர்களை வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோணி வியூகம்
ஆஸ்திரேலியாவின் பவுன்சர் பந்து வீச்சை சமாளிக்க கேப்டன் கூல், டோணி புது வியூகத்துடன் பயிற்சி களத்தில் கால் வைத்துள்ளார்.

டென்னிஸ் ராக்கெட்
இன்று நடைபெற்ற பயிற்சியின்போது, கிரிக்கெட் பேட்டுக்கு பதிலாக, டென்னிஸ் ராக்கெட்டுடன் மைதானத்திற்கு வந்தாராம் டோணி. இது சக வீரர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவுன்சரை சமாளிக்க..
ஆனால், பயிற்சி ஆரம்பித்த பிறகுதான், டோணியின் 'ராஜ தந்திரம்' சக வீரர்களுக்கு தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பவுன்சர் மிரட்டலை சமாளிக்க டென்னிஸ் பேட் பயிற்சி செய்யத்தான் டோணி அவ்வாறு களத்திற்கு வந்திருந்தாராம்.

சின்ன தல ரெய்னா
முதலில் ரெய்னாவை பேட் செய்ய அழைத்து, டென்னிஸ் ராக்கெட்டில் இருந்து பந்தை அடித்துவிட்டுள்ளார். அது பிட்சில் பட்டு எகிறிவருவதை ரெய்னா அடிக்க வேண்டும் என்பதுதான் பயிற்சி. சில பந்துகளை ரெய்னா அடித்துள்ளார், சில பந்துகளை அப்படியே கீப்பர் திசைக்கு குனிந்து விட்டுள்ளார்.

தவானுக்கும் அதே பயிற்சி
சுமார் 20 நிமிட நேரம், ரெய்னாவை போட்டு தாக்கிய, டோணி, அடுத்ததாக ஷிகர் தவானை அழைத்து அதேபோல செய்துள்ளார். டென்னிஸ் ராக்கெட்டில் இருந்து அடிக்கப்படும் டென்னிஸ் பந்து மிக வேகமாக எகிறிவரும் என்பதால், கண்ணிமைக்கும் நேரத்தில் அதை அடித்தாட வேண்டிய கட்டாயத்தில் வீரர்கள் இருந்தனர். இது ஒரு நல்ல பயிற்சி என்று இந்திய வீரர்கள் கூறினர்.

பார்முலாவின் பலன்
டோணியின், டென்னிஸ் ராக்கெட் பார்முலா, பலன் தருமா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications