மும்பை: ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டத்தின் திசையையே மாற்றக் கூடிய திறமை பெற்றிருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி தான் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை முக்கியக் காரணமாக அமைந்தவர்கள் தோனியும் கவுதம் கம்பீரும் தான். இறுதிப்போட்டியில் தோனியும் - கம்பீர் அமைத்த பார்ட்னர்ஷிப் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பெரியளவில் நட்பில் இல்லை. அதுமட்டுமல்லாமல் தோனியை கடுமையாக விமர்சிக்க கூடிய நபராக கவுதம் கம்பீர் இருந்து வருகிறார்.

எப்போதெல்லாம் தோனியை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடுகிறார்களோ அப்போதெல்லாம் கவுதம் கம்பீர் நாயக கலாச்சாரத்தை கைவிடுங்கள் என்று சர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்குவார். ஆனால் ஐபிஎல் தொடரின் போது தோனி குறித்து கம்பீர் ஒருமுறை, எங்களுக்குள் கிரிக்கெட்டில் மட்டுமே போட்டி இருக்கிறது. தோனிக்கு ஒரு பிரச்சனையென்றால், அவருக்கு ஆதரவாக நிற்கும் முதல் நபர் நானாக தான் இருப்பேன் என்று கூறினார்.
அதன்பின்னர் தோனியை சில முறை விமர்சித்தாலும், அதனை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் திடீரென கவுதம் கம்பீர் தோனியை புகழ்ந்து பேசி தொடங்கி இருக்கிறார். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பங்கேற்ற கவுதம் கம்பீர், ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டத்தின் திசையையே மாற்றக் கூடிய திறமை பெற்றிருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி தான். அவரை போன்ற திறமை வாய்ந்த பவர் ஹிட்டங் கொண்ட ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம் என்று நினைக்கிறேன்.
தோனிக்கு முன் முதலில் விக்கெட் கீப்பிங் திறமை தான் முதலில் பார்க்கப்படும். பின்னர் தான் அவருக்கு பேட்டிங் வருகிறதா என்று பார்ப்பார்கள். ஆனால் தோனிக்கு பின் பேட்டிங் திறமை இருந்தால் தான் அணியில் விக்கெட் கீப்பருக்கு இடம் நிலை வந்துள்ளது. தோனி தொடக்க காலத்தை போல் டாப் ஆர்டரில் களமிறங்கி இருந்தால், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார்.
ஆனால் இந்திய அணியின் கேப்டன்சி அவருக்கு கோப்பையை வெல்ல வேண்டிய பொறுப்பை கொடுத்துவிட்டது. அதற்காக தனது பேட்டிங் ஆர்டரை கீழ் வரிசையில் மாற்றிக் கொண்டார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 6 மற்றும் 7 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி தோனி இந்திய அணிக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளார். கேப்டனாக தோனி செய்த சாதனைகளை மக்கள் அதிகமாக பேசுவார்கள். ஆனால் கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதால், தோனி தன்னுள் இருந்த பேட்ஸ்மேனை தியாகம் செய்துள்ளார்.
ஆனால் கேப்டனாக இருக்கும் போது தன்னலமின்றி அணியை முன்னிறுத்த வேண்டும். ஒருவேளை தோனி கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் அதிக ரன்களையும் சதங்களையும் விளாசி இருப்பார். மக்கள் அவரை கோப்பை வென்றதை வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் என்னை கேட்டால், அணியின் வெற்றிக்காக கோப்பைக்காகவும் அவர் தனது சாதனைகளை தியாகம் செய்துள்ளார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.