மும்பை: ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சனும் ஒரே மேடையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதில் தோனிக்கு சஞ்சு சாம்சன் தந்த மரியாதை ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒன்றில் தோனியும் சஞ்சு சாம்சனும், பங்கேற்றார்கள். அப்போது தோனியின் ஐபிஎல் போட்டி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சஞ்சு சாம்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் தோனி விளையாடும்போது பலரும் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்று பேசுவார்கள். ஆனால் என்னுடைய மனதில் இன்னும் கொஞ்சம் காலம் விளையாடுங்கள் என்று நினைக்கத் தோன்றும் என சஞ்சு சாம்சன் கூறினார்.
இந்த பதிலை கேட்டவுடன் தோனி சிரித்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் தோனியிடம் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பேட்டில் ஆட்டோகிராப் வாங்கினார்கள். அதன்பிறகு சஞ்சு சாம்சனிடமும் ஆட்டோகிராப் வாங்க கேட்டார்கள். அதற்கு சாம்சன், தோனி கையெழுத்துப் போட்ட போது அதில் நான் எப்படி போடுவது என்று கேட்டார். தோனி கையெழுத்து உடன் தமது கையெழுத்து இருக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது என்பது போல் சஞ்சு சாம்சன் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதை கேட்ட தோனி உடனே பேட்டையும் பேனாவையும் பிடுங்கி நீ கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று சாம்சனிடம் அன்பாக கொடுத்தார். தோனியின் இந்த அன்பு கட்டளையை மீற முடியாத சஞ்சு சாம்சன் பேட்டின் மறுப்பகுதியில் அவருடைய ஆட்டோகிராபை போட்டுக் கொடுத்தார்.
இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோன்று தோனிக்கும் சஞ்சு சாம்சனுக்கும் பூங்கொத்து வழங்கப்பட்டது. உடனே சாம்சன் தோனியிடமிருந்த பூங்கொத்தை வாங்கி தனியாக டேபிளில் கொண்டு போய் அவர் வைத்தார். தோனிக்கு இவ்வளவு மரியாதை சஞ்சு சாம்சன் ஒரு ரசிகராக கொடுத்து வருகிறார் என்று பலரும் இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.