லண்டன்: ஐபிஎல் தொடரின்போது தோனி தனது ஹோட்டல் அறைகளில் ஒரு "ஷீஷா மேன்" ஐப் பணியமர்த்தியதாக முன்னாள் சிஎஸ்கே வீரரும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரருமான சாம் பில்லிங்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். புகையிலை பயன்படுத்தப்படும் ஷீஷாவை கவனிப்பதே அவரது ஒரே பணி என பில்லிங்ஸ் கூறினார்.
பில்லிங்ஸ், 2018 மற்றும் 2019 ஐபிஎல் சீசன்களில் CSK அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 108 ரன்கள் எடுத்தார். 'ஸ்டிக் டு கிரிக்கெட்' நிகழ்ச்சியில் டேவிட் லாய்ட் கேட்டபோது, சிறந்த பிரான்சைஸ் வீரராக தோனியைப் பெயரிட்டு, அவரை 'அருமையான' மனிதர் என்று பாராட்டினார். மான்செஸ்டர் யுனைடெட் கிளப் மீதான ஈர்ப்பு மூலம் இருவரும் இணைந்ததாக அவத் கூறினார்.

"தோனிதான்… அவரது கேப்டன்ஷிப், அவரது ஆளுமை காரணமாக அவர் ஒரு அற்புதமான நபர். அவர் மிகவும் நம்பமுடியாத அளவிற்கு நிதானமானவர். மேலும், அவர் உண்மையிலேயே கூலானவர். இப்போதெல்லாம் இதுபோன்ற கூலானவர்களைச் சந்திப்பது கடினம். இவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்து இருந்தும் அவர் ஒரு அருமையான மனிதர். என்னைப் போலவே அவரும் ஒரு மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்."

"நாங்கள் ஒவ்வொரு மான்செஸ்டர் யுனைடெட் போட்டியையும் ஒன்றாகப் பார்ப்போம். அவர் ஹோட்டலில் இருந்து வெளியேறவோ அல்லது கீழ் தளத்தில் உள்ள ஹோட்டல் பாருக்குச் செல்லவோ முடியாது. அதனால் அவர் பல வீரர்களை அறைக்கு வரவழைப்பார். அவரது அறை திறந்திருக்கும், அங்கே ஷீஷாவைப் பார்த்துக்கொள்ள ஒரு 'ஷீஷா மேன்' இருப்பார். ஷீஷாவை கவனிப்பதே அவரது ஒரே பணி," என பில்லிங்ஸ் கூறினார்.
இந்தியாவில் ஷீஷா பயன்படுத்துவது சட்டரீதியாக தடை செய்யப்படவில்லை. சில கலாச்சாரங்களில் பிரபலமாக இருந்தாலும், சிகரெட் புகைப்பதைப் போலவே இதுவும் தவறான வெளிச்சத்தில் பார்க்கப்படுகிறது. ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது.

பில்லிங்ஸின் இந்தக் கருத்துக்கள் தோனியின் மீதான சாதாரணப் பாராட்டுகள் என்றாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி ஒருமுறை இந்த ஷீஷா பற்றி வேறு விதமாகப் பேசியுள்ளார். சில வீரர்கள் இந்திய அணியில் தோனியின் முடிவெடுக்கும் திட்டங்களில் செல்வாக்கு செலுத்தப் பயன்படுத்திய வழி இது என்றார். கடந்த செப்டம்பர் மாதம், தோனிக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அல்லது அவரை மகிழ்வித்தவர்கள், தொடக்க லெவனில் இடம் பெற அதிக வாய்ப்புகள் பெற்றிருக்கலாம் என்று திவாரி சூசகமாகத் தெரிவித்தார்.