சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே செயல்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் தோனியின் பங்கு குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஆகாஷ் சோப்ராவின் இந்த கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தனது 19வது ஐபிஎல் சீசனில் களமிறங்க உள்ள தோனி, இந்த ஆண்டும் சென்னை அணியில் முக்கிய அங்கம் வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "தோனி விளையாடுகிறார் என்றால், அவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும். அவர் களத்தில் இருந்து 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றால், போட்டி முழுவதும் அவர் இருப்பார் என்பது தெளிவாகிறது. களத்தில் உள்ள 22 வீரர்களில் மகேந்திர சிங் தோனியை விட சிறந்த கேப்டன் ஒருவரைக் காட்டுங்கள் பார்ப்போம். அப்படி யாராவது இருந்தால் நான் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன். அவர் அங்கு இருக்கும்போது, ஏன் அணியை வழிநடத்தக் கூடாது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தோனியின் முழுமையான பங்களிப்பு தேவை என்றால், அவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த 2024 சீசனுக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதை அடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறார். கடந்த சில சீசன்களாக தோனியின் களப் பொறுப்புகள் படிப்படியாக குறைந்துள்ளன.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் அவர் பெரும்பாலும் கடைசி ஓவர்களில் களமிறங்கி பினிஷராகவே செயல்படுகிறார். அதே நேரத்தில், சஞ்சு சாம்சன் போன்ற முன்னணி வீரர்கள் தற்போது சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளதால், விக்கெட் கீப்பிங் உட்பட எதிர்காலத்திற்கான திட்டங்களை அணி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

கடந்த 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில், 2026 ஐபிஎல் சீசன் முழுவதும் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணி மீண்டும் எழுச்சி காண முயற்சிக்கும் நிலையில், தோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவாரா அல்லது வழிகாட்டியாக மட்டுமே இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
