சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் பங்கு என்னவாக இருக்கும் என்ற விவாதம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது சூடுபிடித்துள்ளது. ஒருவேளை அவர் இம்பேக்ட் பிளேயராக விளையாடுவதாக இருந்தால், அதற்குப் பதிலாக அவர் ஓய்வு பெறலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில சீசன்களுக்கு முன்பே ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல, தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்க சஞ்சு சாம்சனும் கடந்த ஆண்டு அணியில் இணைந்தார். முழங்கால் காயம் காரணமாக தோனி நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் 2026 ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே களமிறங்குவார் என பல்வேறு தரப்பிலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "கிரிக்கெட் ஒன்றும் கால்பந்து விளையாட்டு கிடையாது. மைதானத்திற்கு வெளியே உட்கார்ந்து கொண்டு அணியை வழிநடத்த முடியாது. தோனியின் மிகப்பெரிய பலமே மைதானத்தில் அவர் ஆட்டத்தை கணிக்கும் விதம் தான். அந்த தெளிவுதான் அவரை ஒரு சிறந்த வீரராகவும் தலைவனாகவும் உருவாக்கியுள்ளது. அவர் இம்பேக்ட் பிளேயராக விளையாட வேண்டிய நிலை வந்தால், அவர் தனது ஓய்வை அறிவிப்பதே சரியான முடிவாக இருக்கும். விக்கெட் கீப்பிங் செய்ய சஞ்சு சாம்சன் தயாராக உள்ளார். எனவே இது தோனியின் கடைசி சீசனாகவே இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டூ பிளெசிஸும் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "5 முறை ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணிக்கு தற்போது பேட்ஸ்மேன் தோனியை விட, வியூகங்களை வகுக்கும் தோனியே அதிகம் தேவைப்படுகிறார். கேப்டனாக ருதுராஜ் சிறப்பாக செயல்படுகிறார் என்றாலும், தந்திரங்களை கையாள்வதில் தோனியின் மூளை மிகச் சிறப்பாக செயல்படும். ஆட்டத்தை அவர் கணிக்கும் விதமும், பீல்டிங்கை அமைக்கும் விதமும் தான் அவரது மிகப்பெரிய சூப்பர்பவர். எனவே, கட்டாயம் அவர் மைதானத்தில் இருக்க வேண்டும். அவரது அந்த அபாரமான திறமையை சென்னை அணி நிர்வாகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
