ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி எப்போதுமே சக வீரர்களை நட்புடன் நடத்துவார் என்று நாம் அனைவருக்கும் தெரியும். இதனால் தான் தோனிக்கு விளையாடும்போது பல வீரர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக பல வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் இதுதான்.
தோனி சாதாரண வீரராக இருந்த போதும் சரி உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இருந்த போதும் சரி. எப்போதுமே ஒரே மாதிரியாக தான் மற்றவர்களும் நடந்து கொள்வார். இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை தற்போது பார்க்கலாம்.

தோனி இந்திய ஒரு நாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு சாதாரண வீரராகவே அணியில் விளையாடி வந்தார். அப்போது தோனி, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் அடிக்கடி விளையாடி வந்தார். இப்போதுதான் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதற்கு சோம்பேறித்தனம் படுகிறார்கள்.
குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் எல்லாம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தோனி கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த போதிலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவார். அப்படித்தான் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 2017 ஆம் ஆண்டு தோனி விளையாட முடிவெடுத்தார்.
அப்போது கொல்கத்தாவில் ஒரு போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டியில் பங்கு பெற ஜார்க்கண்ட் அணி வீரர்கள் அனைவருக்கும் ரயிலில் டிக்கெட் போடப்பட்டது. ஆனால் தோனி ஸ்டார் வீரர் என்பதால் அவருக்கு மட்டும் விமானத்தில் டிக்கெட் போடப்பட்டிருந்தது. முதலில் இந்த சம்பவம் தோனிக்கு தெரியாது.
ஆனால் பிறகு மற்ற வீரர்கள் எங்கே என்று கேட்டபோது அனைவருக்கும் விமானத்தில் டிக்கெட் போடும் அளவுக்கு பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை என்றும் நீங்கள் ஸ்டார் வீரர் என்பதால் உங்களுக்கு மட்டும் விமானத்தில் டிக்கெட் போடப்பட்டிருப்பதாகவும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறி இருக்கின்றனர்.
இதைக் கேட்ட தோனி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் உடனே தான் விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் மற்ற வீரர்களும் என்னுடன் விமானத்தில் வரவேண்டும். இல்லை என்றால் நான் அவர்களுடன் ரயிலில் சென்று விடுகிறேன். எனக்கு ரயிலில் டிக்கெட்டை புக் செய்து விடுங்கள். இந்த விமான டிக்கெட்டை ரத்து செய்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
தோனியின் இந்த பேச்சைக் கேட்டவுடன் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அதிர்ச்சடைந்தனர். ஆனால் தோனி வற்புறுத்தியதால் விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டு தோனிக்கு ரயிலில் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து தோனி ஜார்கண்ட் அணி வீரர்களுடன் ரயிலில் புறப்பட்டு சென்றார். ரயிலில் தோனியை பார்த்தவுடன் வீரர்களுக்கு அதிர்ச்சி அடைந்து விட்டனராம்.
அப்போது தோனி, தாம் ரயிலில் வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று தன்னுடைய ரயில்வே பணி குறித்தும் வீரர்களுடன் எடுத்துரைத்திருக்கிறார். வீரர்கள் மத்தியில் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற பேரெல்லாம் தோனியிடம் எடுபடாது அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தோனி விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு வீரர்களுடன் ரயிலில் சென்று இருக்கிறார். உலகின் முன்னணி வீரராக இருந்தும் தோனி எடுத்த இந்த முடிவு போற்றுதலுக்கு உரியது. ஆனால் இப்போது இருக்கும் வீரர்களிடம் இதை கொஞ்சம் கூட நாம் எதிர்பார்க்க முடியாது.