ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வந்தாலும் இந்தத் தொடர் முடிந்தவுடன் அனைவரின் கவனமும் ஐபிஎல் ஏலம் நோக்கி சென்றுவிடும்.
வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் இன் கேப்டன் தோனி தாம் வரும் சீசனில் விளையாடுவேனா இல்லை மாட்டேனா என்பது குறித்து அறிவிக்க உள்ளார்.

ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் அதற்கு ஏற்றார் போல் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதனால் தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தங்களுடைய வாழ்க்கை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அதில் தாம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தாலும் இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறேன். தற்போது எனக்கு 42 வயது ஆகிறது. வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக என் உடல் தகுதியை நான் கடைப்பிடித்து வருகிறேன். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது நான் இளம் வீரர்களுக்கு போட்டியாக இருக்க வேண்டும்.
அதனால் இளைஞர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நானும் செய்தால் மட்டுமே அவர்களுடன் என்னால் போட்டி போட முடியும். 18 வயது வீரர் எவ்வாறு பயிற்சி செய்கிறார்? சாப்பாட்டு விஷயத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதைப் போல் நானும் அதனை செய்ய வேண்டும். அப்போது நண்பர்கள் சிலர் என்னிடம் கோபப்பட்டு கொள்வார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டாயே பிறகு ஏன் சாப்பாட்டில் இவ்வளவு கவனம் செலுத்துகிறாய்?எங்களுடன் சேர்ந்து சாப்பிடு என்று கூறுவார்கள்.
அப்போது எனக்கு நெருக்கடி ஏற்படும். நண்பர்களின் மனதையும் புண்படுத்தக் கூடாது, அதே சமயம் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக நான் சாப்பாட்டு விஷயத்தில் சில அட்ஜஸ்ட்மெண்ட்களை செய்வேன். ஐபிஎல் இல் விளையாட வேண்டும் என்பதற்காக உடல் தகுதியை இன்னும் கடைப்பிடித்து வருகிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவரை நான் கிரிக்கெட் விளையாடினாலும் சரி விளையாடாவிட்டாலும் சரி நட்சத்திர அந்தஸ்தை பெற்று விட்டதால் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் அனைவரின் கவனமும் நம்மீது எப்போதுமே இருக்கும் என்று தோனி கூறினார். தோனியின் இந்த பேச்சை கேட்டவுடன் அவர் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாட போகிறார் என்பதை ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.