சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் ஐபிஎல் 2026 சீசனுக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்காக மட்டும் பணத்தை வாரி இறைத்துள்ளது. இந்த நிலையில், தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவாரா? அல்லது இம்பாக்ட் வீரராக சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து சிஎஸ்கே வட்டாரத்தில் எதிர்கால திட்டம் ஒன்று கூறப்படுகிறது.
2026 ஐபிஎல் ஏலத்தில் சுமார் 32.20 கோடி ரூபாயை விக்கெட் கீப்பர்களுக்காக மட்டும் சிஎஸ்கே செலவு செய்துள்ளது. இது தோனிக்கு அடுத்து மாற்று விக்கெட் கீப்பர்களை உருவாக்கும் முயற்சி என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
44 வயதாகும் எம்.எஸ்.தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அணி தடுமாறக்கூடாது என்பதற்காகவே சிஎஸ்கே இந்தத் துணிச்சலான முதலீட்டைச் செய்துள்ளது.

சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த முறை விக்கெட் கீப்பர்களைக் குறிவைத்துத் தூக்கியுள்ளது. சஞ்சு சாம்சனை 18 கோடிக்கும், கார்த்திக் சர்மா என்ற உள்ளூர் விக்கெட் கீப்பரை 14.20 கோடிக்கும் வாங்கி உள்ளது. ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பே ஜடேஜா மற்றும் சாம் கரணை கொடுத்துவிட்டு, ராஜஸ்தான் ராயல்ஸிடம் இருந்து சஞ்சு சாம்சனை டிரேட் செய்தது. இவர் ஒரு அனுபவம் வாய்ந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்.
ஐபிஎல் 2026 ஏலத்தில் 19 வயதே ஆன இளம் விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மாவை சாதனை விலைக்கு வாங்கியது. ஏற்கனவே உர்வில் படேல் அணியில் உள்ள நிலையில், இப்போது தோனியைத் தவிர்த்து மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர். 2008 முதல் தோனியை மட்டுமே நம்பியிருந்த சிஎஸ்கே, இப்போது இப்படிச் செய்வது மாற்றத்திற்கான அறிகுறிதான்.
இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளிப்படையாகவே பேசியுள்ளார். "என்றாவது ஒருநாள் எம்.எஸ்.தோனி விடைபெறுவார் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டே ஆக வேண்டும். சஞ்சு சாம்சன் ஒரு சர்வதேசத் தரமான வீரர், அவர் அந்த இடத்தை தோனிக்கு மாற்றாக சரியாக நிரப்புவார். கடந்த கால வெற்றிகளை வைத்துக்கொண்டு பழைய பாணியிலேயே இருக்க முடியாது. நாங்கள் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோனியின் முன்னாள் சக வீரரான ராபின் உத்தப்பா கூறுகையில், "ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இது நிச்சயம் எம்.எஸ்.தோனியின் கடைசி சீசனாகத்தான் இருக்கும்," என்று அடித்துச் சொல்லியுள்ளார். தோனி கடந்த சீசனின் போதே, "நான் எனது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்" என்று ஒப்புக்கொண்டார்.
4 கோடி ரூபாய்க்கு அன்கேப்ட் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ள தோனி, 2026 ஐபிஎல் தொடருடன் விடைபெறுவார் என்றும், அதன் பிறகு விக்கெட் கீப்பிங் பொறுப்பு சஞ்சு சாம்சன் அல்லது கார்த்திக் சர்மா வசம் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தோனி கட்டமைத்த சாம்ராஜ்யம், அவர் இல்லாமலும் தொடர வேண்டும் என்பதற்கான அடித்தளமே இந்த 32 கோடி ரூபாய் முதலீடு.