சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பாரா? இல்லையா? என்ற முடிவு இன்னும் சில தினங்களில் தெரிய வரு,அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தோனியும், சிஎஸ்கே நிர்வாகிகளும் மும்பையில் சந்தித்து பேச உள்ளதாக அந்த அணி வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஆறு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். மேலும், பல சிக்கலான விதிகளும் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால், தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த சிக்கலும் இன்றி தக்க வைக்கும் வகையில் அவரை உள்ளூர் வீரராக அறிவிக்கும் ஒரு விதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத தோனி, உள்ளூர் வீரராக அறிவிக்கப்படுவார். அதன் மூலம், சிஎஸ்கே அணி அவரை குறைந்த சம்பளத்துக்கு தக்க வைக்கும். இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்க சிஎஸ்கே அணி செலவு செய்ய முடியும்.
தோனியால் 2025 ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. தற்போது 42 வயதாகும் நிலையில் அவரால் முழு திறனையும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்த முடியுமா? நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய முடியுமா? விக்கெட் கீப்பிங் செய்ய அவர் தயாராக இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் உள்ளன. 2024 ஐபிஎல் தொடரிலேயே தோனி காலில் வீக்கத்துடன் தான் போட்டிகளில் பங்கேற்றார். அதனால் தான் அவர் அப்போதே கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அளித்தார்.
எனவே, தோனியை சிஎஸ்கே அணி குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்து இம்பேக்ட் வீரராக மட்டும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. தோனி விளையாடினால் அதன் மூலம் ஐபிஎல் தொடருக்கும் அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்ற திட்டத்தின்படியே பிசிசிஐ அவருக்காக விதியில் மாற்றம் செய்து இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம், தோனி 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகிகளிடம் பேச உள்ளார். அதன் முடிவில் அவரை அந்த அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம், எந்தெந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்ற பட்டியலை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் அளிக்க வேண்டும். சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதிஷா பதிரானா மற்றும் தோனி ஆகிய நான்கு வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர். அதன் முடிவில் தோனி விளையாடுவது குறித்த நல்ல செய்தியை சிஎஸ்கே நிர்வாகம் வெளி உலகுக்கு அறிவிக்கும் என தோனி ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
சிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, தீபக் சாஹர், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ஷர்துல் தாக்குர் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களை ஏலத்துக்கு முன் விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவர்களில் சிலரை மீண்டும் ஏலத்தில் வாங்கவும் வாய்ப்பு உள்ளது.