சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடியிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் நிகழ்வின் போது 'ஃபிக்ஸிங்' செய்ததாக ஒரு சர்ச்சையைச் சில ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர்.
அந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் போடுவதற்கான காயினை சுண்டினார். அப்போது எதிரணி கேப்டனான தோனி, அது 'ஹெட்ஸ்' (தலை) அல்லது 'டெயில்ஸ்' (பூ) என்பதைச் சொல்ல வேண்டும். அப்போது அவர் தனது முடிவைச் சத்தமாகச் சொல்லாமல், மேட்ச் ரெஃப்ரியின் காதருகே சென்று சொன்னதாக வீடியோவில் பதிவாகி இருந்தது. அப்போது டாஸில் ஹெட்ஸ் விழுந்தது. மேட்ச் ரெஃப்ரீ சிஎஸ்கே அணி டாஸ் வென்றதாகக் கூறினார்.

இதைச் சுட்டிக்காட்டி, "ஏன் தனது முடிவை தோனி சத்தமாகச் சொல்லவில்லை? இதன் மூலம் டாஸில் என்ன விழுந்தாலும், சிஎஸ்கே தான் டாஸ் வென்றதாக மேட்ச் ரெஃபரி அறிவிப்பார். அதற்காகத்தான் இதுபோல தோனி சத்தமாகச் சொல்லவில்லை" எனச் சில ரசிகர்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இதன் மூலம் சிஎஸ்கே மற்றும் தோனி டாஸ் ஃபிக்ஸிங் செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டு, அந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், உண்மையில் தோனி 'ஹெட்ஸ்' எனச் சொன்னது, டாஸ் நடந்த வீடியோவின் ஆடியோ சத்தத்தை அதிகப்படுத்தி கேட்கும்போது தெளிவாகத் தெரிகிறது.
அப்படியென்றால், தோனி ஏன் மேட்ச் ரெஃப்ரியின் காதருகே சென்று தனது முடிவைச் சொன்னார் எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு உண்மையான காரணம், டாஸ் நடந்தபோது மைதானத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
பலரும் தோனியைப் பார்த்த மகிழ்ச்சியில் கோஷமிட்டு வந்தனர். அதிக இரைச்சல் இருந்தது. அப்போது தோனி சற்று தூரத்தில் நின்று மேட்ச் ரெஃபரியிடம் தனது முடிவைச் சொன்னால் அவருக்கு அது சரியாகக் கேட்காமல் போகலாம். எனவேதான், மேட்ச் ரெஃபரியின் காதுக்கு அருகே சென்று 'ஹெட்ஸ்' என்று சத்தமாக சொன்னார். ஆனால், அந்த இரைச்சலில் அவர் சொன்னது சரியாக வீடியோவில் பதிவாகவில்லை.
இதுதான் நடந்த உண்மை. இதை தற்போது பலரும் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றனர். தோனி சத்தமாகச் சொன்ன அந்த ஆடியோ பகுதியைத் தனியாக எடுத்துப் பதிவிட்டு, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.