மும்பை: சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு நான் தம்பியை போன்றவன் என்பதாலேயே அதிகம் திட்டு வாங்குகிறேன் என்று தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும், நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் இருவரும் நெருங்கிய நட்பில் இருப்பவர்கள். தீபக் சஹர் குறித்து தோனி பேசுகையில், தீபக் சஹர் அருகில் இருந்தால் ஏன் இவர் அருகில் இருந்து தொல்லை செய்கிறார் என்று தோன்றும். அதேபோல் நம் அருகில் அவர் இல்லையென்றால் அவர் எங்கே என்று மனம் தேடும். அவருக்கு முதிர்ச்சி என்பதே கிடையாது என்று கலாய்த்தார்.

அதேபோல் ஐபிஎல் தொடரின் போதும் பேட்டிங் பயிற்சி செய்கிறேன் என்று தீபக் சஹர் முகத்திற்கு நேராக பேட்டை அடிக்க கொண்டு சென்றது, டாஸ் போடும் போது சஹரை தலையில் அடிப்பது போல் சென்று பின் வாங்கியது, இறுதிப்போட்டிக்கு பின் ஜெர்சியில் கையெழுத்து போட முடியாது என்று தோனி தீபக் சஹரிடம் வேற லெவலில் சேட்டையை கொடுத்தார்.
இதன் மூலமாகவே தோனி - சஹர் இருவருக்கும் நல்ல நட்பு இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் தோனி குறித்து தீபக் சஹர் பேசுகையில், சென்னை அணியின் கேப்டன் தோனி எனக்கு ஒரு அண்ணனை போன்றவர். ஐபிஎல் தொடரின் போது எப்போதும் கலாய்த்து கொண்டே இருப்பார். எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. அவருடன் நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயணித்து வருகிறேன்.
அவரை என்னை ஒரு தம்பியை போல் பார்த்துக் கொள்கிறார். தோனி வேறு யாருடனும் அதிகமாக ஜாலியாக நேரம் செலவிட மாட்டார். அதன் காரணமாகவே நான் அதிகமாகவே திட்டு வாங்குவேன். அவர் தான் கிரிக்கெட்டில் எனக்கு ரோல் மாடல். அவருடன் விளையாடுவது நான் பெற்ற அதிர்ஷ்டம். இறுதிப்போட்டி முடிவடைந்த பின் எனக்கு கையெழுத்து போடாததற்கு வேறு காரணம் உள்ளது. எப்போதெல்லாம் சாம்பியன் பட்டம் வெல்கிறோமோ, அப்போது அணியில் உள்ள அத்தனை வீரர்களிடமும் என் ஜெர்சியில் கையெழுத்து வாங்குவேன்.
என் வீட்டில் 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகள் வென்ற போது கையெழுத்து பெற்ற ஜெர்சி இப்போதும் உள்ளது. கடந்த சீசனில் நான் மீண்டும் கையெழுத்து கேட்ட போது, அந்த வாய்ப்பிலும் கலாய்த்தார். நான் கேட்ச்சை கோட்டைவிட்டதால், என்னால் கையெழுத்துப் போட முடியாது என்று கலாய்த்தார் என்று கூறியுள்ளார்.