அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து தாம் ஓய்வு பெற இது சரியான தருணமாக இருக்கும் என்று தோனி பேசிய வார்த்தைகள் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. ஆனால் தன்னுடைய எதிர்காலம் குறித்தும் தோனி டிவிஸ்ட் வைத்து பேசியிருக்கிறார்.
ஐபிஎல் கோப்பையில் ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்த பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே உடன் உரையாடினார். அப்போது ஹர்ஷா போக்லே கடந்த முறை நான் உங்களிடம் ஓய்வு குறித்து கேட்டபோது நீங்கள் வெளிப்படையாக பதில் சொன்னீர்கள்.

இப்போது என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டார். அதற்கு பதில் அளித்த தோனி நான் ஓய்வு முடிவை அறிவிக்க இது சிறந்த தருணமாகவும் நேரமாகவும் இருக்கும். ரசிகர்களுக்கு நன்றி என்று கூறிவிட்டு ஓய்வு பெறுவது எனக்கு எளிதாக இருக்கும். அதுவே மீண்டும் ஒன்பது மாதம் கடுமையாக உழைத்து விட்டு மீண்டும் ஒரு சீசன் விளையாடுவது கடினம் தான். ஆனால் என் உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
சிஎஸ்கே ரசிகர்களிடமிருந்து நான் பெரும் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்களுக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாடுவது நிச்சயம் சிறந்த பரிசாக ரசிகர்களுக்கு இருக்கும். எனக்காக அவர்கள் காட்டும் அன்பு, உணர்ச்சி அனைத்தும் அவர்களுக்காக நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி பகுதி.
மைதானம் முழுவதும் ரசிகர்கள் அமர்ந்து என்னுடைய பெயரை கத்தும் போது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் இன்று வந்தது. என்னால் முடியும் போதெல்லாம் அவர்களுக்காக நான் விளையாட ஆசைப்படுகிறேன். நான் சாதாரண ரசிகனை போல் கிரிக்கெட் விளையாடுகிறேன். அவர்கள் ஆடுவதைப் போல் நானும் விளையாடுவதால் என்னுடன் அவர்கள் ஒத்துப் போகிறார்கள்.
இதனால் தான் என்னை அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். எந்த கோப்பையாக இருந்தாலும் அதற்கென சில சவால்கள் இருக்கும். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அழுத்தத்தை எதிர்கொள்வதில் வீரருக்கு வீரர் மாறுபடலாம். இளம் வீரர்களுக்கு சந்தேகம் குழப்பம் வரும்போதெல்லாம் அவர்களுடன் நாங்கள் உரையாடுவோம்.
ராயுடு பற்றி சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இருவரும் ஒன்றாக தான் இந்திய ஏ அணிக்காக விளையாடினோம். களத்தில் அவர் 100% பங்களிப்பை கொடுப்பார். சுழற் பந்துவீச்சு வேகப்பந்து வீச்சு என இரண்டையும் ஒரே அளவில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் அவர். ராயுடு களத்திற்கு வந்தால் நிச்சயமாக ஏதாவது ஸ்பெஷலாக செய்வார் என்பது எனக்குத் தெரியும். ராயுடுவும் என்னைப் போல் தொலைபேசியை பயன்படுத்த மாட்டார் என்று தோனி கிண்டல் அடித்தார்.