மும்பை: பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியை சீண்டும் வகையில் சமூக வலை தள பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஹர்பஜன் சிங் கடும் எதிர்வினை ஆற்றி இருக்கிறார். எதற்காக உலகின் நம்பர் 1 விக்கெட் கீப்பர் தோனி குறித்து இது போன்ற சல்லித்தனமான கேள்விகளை கேட்கிறாய்? என அவர் விளாசி இருக்கிறார்.
உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளங்கிய தோனியை, பாகிஸ்தான அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் உடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பு இருந்தார் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஃபரீத் கான். அவர் "தோனி மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர்? உண்மையாக என்னிடம் சொல்லுங்கள்" என ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

அது வேண்டுமென்றே தோனி மற்றும் அவரின் ரசிகர்களை சீண்டும் வகையில் இருந்தது. ஏனெனில், தோனி உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்தார். மேலும், அவர் ஃபினிஷராக புகழ்பெற்ற வீரராக இருந்தார். விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது, பந்தை பார்க்காமல் ரன் அவுட் செவது என அவர் மற்ற விக்கெட் கீப்பர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
அதே சமயம், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மூன்றாம் வரிசை அல்லது நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார். அவர் ஃபினிஷர் இல்லை. மேலும், விக்கெட் கீப்பிங்கில் தோனியுடன் எந்த வகையிலும் அவரை ஒப்பிட முடியாது என்பதே உண்மை. ரிஸ்வான் பல சமயம் தோனியை போல ரன் அவுட் செய்ய முயன்றிருக்கிறார். எனவே, அவரே தோனியைத்தான் பின்பற்றுகிறார் என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், ஃபரீத் கான் இந்தத் தேவையில்லாத ஒப்பீட்டை செய்திருந்தார். அதைக் கண்டு கோபமடைந்த ஹர்பஜன் சிங், "இப்போதெல்லாம் நீ என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்? இது ஒரு சல்லித்தனமான கேள்வி. இந்தக் கேள்வியை ரிஸ்வான் இடம் கேட்டால் கூட அவரே உண்மையான பதிலை சொல்லி விடுவார். ரிஸ்வான் ஒரு நல்ல வீரர் தான். எனக்கும் அவரை பிடிக்கும். எப்போதும் வெற்றிக்காக ஆட வேண்டும் என நினைப்பவர். ஆனால், இது போன்ற ஒப்பீடு மிகவும் தவறானது. தோனி இன்றும் கிரிக்கெட் உலகில் நம்பர் 1 வீரராக இருக்கிறார். ஸ்டம்புகளுக்கு பின்னே அவரை விட சிறந்த விக்கெட் கீப்பர் என யாரும் இல்லை." என ஹர்பஜன் சிங் விளாசி இருக்கிறார்.