சென்னை: எந்த விஷயமாக இருந்தாலும் சிஎஸ்கே உரிமையாளர் ஸ்ரீனிவாசனிடம் மட்டுமே சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பேசுவார் என்று அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை அணிக்கும் கேப்டன் எம்எஸ் தோனிக்கும் இடையிலான உணர்வினை வார்த்தைகளால் சொல்லிட முடியாது. அதற்கு சென்னை அணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் தோனியால் எடுக்க முடியும். அந்த அளவிற்கு தோனிக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன். பிசிசிஐ தலைவராக இருந்த போதே இருவரும் நட்புடன் இருந்து வருகிறார்கள்.

இதன் காரணமாகவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திலும் தோனி முக்கியமான பதவியில் உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீனிவாசன் - தோனி இடையிலான உறவு குறித்து சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதில், இறுதிப்போட்டி முடிவடைந்த பின்னர் உடனடியாக மும்பை செல்வதாக எங்களிடம் தெரிவித்தார். அங்கு அறுவை சிகிச்சை முடிவடைந்த பின் சொந்த ஊரான ராஞ்சி சென்று ஓய்வில் இருக்க போவதாகவும் தோனி கூறினார்.
அதன்பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் திருமண முடிவடைந்த பின், தம்பதிகளை தோனி சந்தித்தார். இதையடுத்து சொந்த ஊரில் தோனி முழுமையான ஓய்வில் இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி வரை மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. அதுகுறித்து நாங்கள் அவருக்கு நினைவுபடுத்தவும் தேவையில்லை. ஏனென்றால் தோனிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும்.
நாங்களும் தோனியிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டோம். அவராகவே எங்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அழைப்பார். அதேபோல் தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை நேரடியாக ஸ்ரீனிவாசனிடம் மட்டுமே கூறுவார். வேறு யாருக்கும் அழைத்து தோனி என்ன செய்கிறேன் என்பதை சொல்லவும் மாட்டார். ஸ்ரீனிவாசன் மூலமாக தோனி சொல்வதை நாங்கள் அறிந்துகொள்வோம். இப்போது மட்டுமல்ல, 2008ஆம் ஆண்டு முதலே அப்படிதான் நடந்து வருகிறது.. இனியும் அப்படிதான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.