பிளட்சருக்கு மட்டும்தான் 'ஆப்பு'.. டோணிக்கு இப்போதைக்கு இல்லை!
மும்பை: இந்திய அணி நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்த இந்திய கிரிக்கெட் வாரியம், கேப்டன் டோணியை மாற்றும் உத்தேசம் இல்லை என்று கூறியுள்ளது.
இன்னும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு ஆறு மாதங்களே உள்ளதால் இப்போது கேப்டனை மாற்றினால் சரிப்பட்டு வராது என்பதால் கேப்டனை மாற்றும் திட்டத்தை கிரிக்கெட் வாரியம் யோசிக்கவில்லையாம்.
இருப்பினும் டோணியின் தலைமைத்துவம் சமீப காலமாக பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதால் அவரது வழிநடத்தலை பிசிசிஐ கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

டெஸ்ட் தோல்வி
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கேவலமாக இழந்ததைத் தொடர்ந்து இந்திய அணி நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது பிசிசிஐ.

டைரக்டர் சாஸ்திரி
அணியின் இயக்குநர் என்ற புதிய பதவியில் ரவி சாஸ்திரி போடப்பட்டுள்ளார். பிளட்சருக்கு உதவியாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டம்மி டங்கன்
பீல்டிங், பவுலிங் கோச்சுகளை அனுப்பி விட்டனர். தற்போது பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் டம்மியாகி விட்டார். இனி அவர் எது செய்தாலும் ரவி சாஸ்திரியைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும்.

மறைமுகமாக விரட்டும் பிசிசிஐ
உண்மையில் இது பிளட்சரை "பத்தி" விடுவதற்கான வேலை என்று கூறப்படுகிறது. நேரடியாக அவரை அனுப்பாமல் இப்படி சைடு வழியாக வந்து அவராகவே போகும்படியான வேலைகளைச் செய்துள்ளது கிரிக்கெட் வாரியம். இவரால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் பல காலமாக கூறி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

தப்பினார் டோணி
அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதால் அது முடியும் வரை டோணியை மாற்றுவதில்லை என்ற முடிவையும் பிசிசிஐ எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே இப்போதைக்கு டோணி தலை தப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications