மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வரும் நிலையில், அவரைப் போல் மற்ற முன்னாள் வீரர்களான தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது தோனிக்கு வயதாகி வருவதால் அவர் சிஎஸ்கே அணியின் மெண்டர் பணியை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தோனி பயிற்சியாளராக வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தோனி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவதற்காக எந்த ஒரு விருப்பத்தையும் காட்ட வில்லை.

விளையாட்டு வீரராக செயல்படுவது வேறு, பயிற்சியாளராக செயல்படுவது என்பது வேறு. பயிற்சியாளர் பணி மிகவும் கடினமாக இருக்கும். சில சமயம் பயிற்சியாளர் பணி, உங்களை பிசியாகவே வைத்திருக்கும். நீங்கள் விளையாடிய காலத்தை விட சில அதிக நாட்கள் பயிற்சியாளர் பணிக்கு தேவைப்படலாம்.
தோனிக்கு அழகிய குடும்பம் ஒன்று இருக்கின்றது. சிறுவயதில் இருந்து தொடர்ந்து ஒரே பணியை தோனி செய்து முடித்து விட்டார். இந்த சூழலில் மீண்டும் அதே பணியை செய்ய சொன்னால், அது யாராலும் முடியாது. அந்தப் பணியை மீண்டும் செய்வதற்கு எந்த கிரிக்கெட் வீரர்களும் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் பல ஸ்டார் வீரர்கள் பயிற்சியாளர் பணிக்கு வருவது கிடையாது.
அப்படி வந்தாலும் ஐபிஎல் போன்ற வெறும் இரண்டு மாதம் மட்டும் நடக்கும் தொடருக்கு தான் பயிற்சியாளராக வருவார்கள். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக நீங்கள் இருக்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு பத்து மாதங்கள் உங்களுடைய பணி இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 2021 டி20 உலக கோப்பை தொடர் துபாயில் நடைபெற்ற போது, தோனி அந்த தொடருக்கு மெண்டராக பணியாற்ற ஒப்புக்கொண்டார் எனினும் அதற்காக தோனி ஒரு ரூபாய் கூட பிசிசிஐ இடம் இருந்து சம்பளமாக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.