சென்னை : தோனியின் நெருங்கிய நண்பராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாகவும் இருந்த அம்பத்தி ராயுடு கடந்த 2023 ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவரால் இன்னும் ஒன்று, இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் ஆட முடியும் என்றாலும் அவர் ஏன் திடீரென ஓய்வை அறிவித்தார் என பலருக்கும் ஒரு கேள்வி இருந்தது. அதற்கான விடை சில நாட்கள் முன்பு கிடைத்தது.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அம்பத்தி ராயுடு, அந்த மாநிலத்தின் தற்போதைய ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். ஏதோ போகிற போக்கில் அம்பத்தி ராயுடு சாதாரணமாக அரசியலில் இறங்கவில்லை. தெளிவாக பல மாதங்கள் திட்டம் போட்டு காய் நகர்த்தி இருக்கிறார் என்கிறார்கள் அவரது கடந்த சில மாத செயல்பாட்டை உற்று நோக்கி வரும் அரசியல் விமர்சகர்கள்.
அம்பத்தி ராயுடு கிரிக்கெட்டில் ஒரு முரட்டுக்காளையாக தான் இருந்தார். அவரது மாநில கிரிக்கெட் அமைப்பான ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்புடன் பல முறை மோதி இருக்கிறார். வேறு மாநிலத்துக்காக ஆடி இருக்கிறார். அதே போல, ஐபிஎல் தொடருக்கு முன் 2007இல் இந்தியன் கிரிக்கெட் லீக் டி20 தொடர் தொடங்கப்பட்ட போது அதில் சென்று சேர்ந்த சில வீரர்களில் அம்பத்தி ராயுடுவும் ஒருவர்.
அந்த தொடரை ஆதரித்து அப்போது அவர் அளித்த பேட்டி, பிசிசிஐ-யை கடும் கோபம் கொள்ள வைத்தது. அரசல் புரசலாக இருந்த அந்த தொடர் குறித்த பிசிசிஐ-யின் எதிர்ப்பை மேலும் பெரிதாக்கினார் ராயுடு. அதன் பின்னர் அந்த விவகாரம் பெரிதாக வெடித்து பிசிசிஐ அந்த தொடரை முற்றிலும் நிறுத்தும் வேலையில் இறங்கியது. அதன் முடிவில் தான் ஐபிஎல் தொடர் தொடங்கியது. இப்படி பெரிய கிரிக்கெட் வீரர் ஆகும் முன்பே, "யாராக இருந்தால் என்ன.. மோதிப் பார்த்து விடுவோம் வா" என்ற மனநிலை கொண்டவர் ராயுடு.
அதே சமயம் கிரிக்கெட்டில் திறமையான வீரராகவும் இருந்தார். அவருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காத போதும், ஐபிஎல் தொடரில் 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்தார். அதன் பின் 2018 முதல் 2023 வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்க முடியாமல் போனதால் மன வருத்தத்தில் இருந்த ராயுடு, கடந்த ஒரு ஆண்டாக அரசியலில் இறங்க ஆழம் பார்த்து இருக்கிறார். 2024இல் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அதில் போட்டியிடுவது என்பதே அவரின் திட்டம். சரியாக அதே சமயம் ஐபிஎல் தொடரும் நடக்கும் என்பதால், 2023 ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.
அடுத்து அவசர அவசரமாக ஏதோ ஒரு கட்சியில் சேராமல் எந்த கட்சியில் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என ஆழம் பார்த்து இருக்கிறார். அதற்காக ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம்மேற்கொண்டு இருக்கிறார். தற்போதைய அரசியல் குறித்து மக்களின் மனநிலை என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது, எந்த கட்சியில் இணைந்தால் ஆந்திராவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என புரிந்து கொள்ள சிறிது காலம் எடுத்துக் கொண்டார்.
கடந்த சில மாதங்களில் யூட்யூப்பில் அம்பத்தி ராயுடுவின் பேட்டியை பல்வேறு மொழிகளில் பார்த்து இருக்கலாம். தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என வளைத்து வளைத்து மூன்று மொழிகளிலும் உச்சத்தில் இருக்கும் சேனல்களை பிடித்து பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார் அம்பத்தி ராயுடு. அது எல்லாமே அவர் மீதான இமேஜை உயர்த்தவும், ஐபிஎல் தொடருக்கு பின் மக்கள் அவரை மறக்காமல் இருக்கிறார்களா என பார்க்கவும் அவர் செய்த ஒரு உத்தி என்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் சரியாக செய்த அம்பத்தி ராயுடு, ஜகன் மோகன் ரெட்டி தலைமையில் செயல்படும் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் தான் தனக்கு சரியான கட்சி என முடிவு செய்து சேர்ந்து இருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என்பதை உறுதி செய்த பின்னரே அவர் சேர்த்து இருக்கிறார் என்கிறார்கள் ஆந்திரா மாநில அரசியல் பார்வையாளர்கள்.