சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான வீரர்கள் பரிமாற்றப் பேச்சுவார்த்தையில், தோனியின் பங்குதான் மையப்புள்ளியாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்குக் கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை சென்னை அணிக்குக் கொண்டுவரும் இந்த மெகா திட்டத்தின் பின்னணியில், தோனியின் எதிர்காலத் திட்டம் இருப்பதாகவும், இது ஐபிஎல் அரங்கில் அவரது கடைசி அத்தியாயமாக இருக்கலாம் என்றும் கைஃப் கூறியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து விரிவாகப் பேசிய முகமது கைஃப், "இந்த வீரர்கள் பரிமாற்றம் வெற்றிகரமாக நடந்தால், இது தோனியின் கடைசி ஐபிஎல் ஆண்டாக இருக்கும். சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்து, நிர்வாகத்துடனும் தோனியுடனும் எளிதாகப் பழகிவிட்டால், ஒருவேளை தோனி பாதியிலேயே கூட அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலக வாய்ப்புள்ளது," என்று குறிப்பிட்டார்.

"பல ஆண்டுகளாக எங்கள் மேட்ச்-வின்னராக இருந்த ஜடேஜாவை நாங்கள் விட்டுக்கொடுத்தோம், ஆனால் எங்களுக்கு ஒரு எதிர்கால கேப்டன் தேவை' என்று தோனி நினைப்பதே இதற்குக் காரணம். 2022-ல் ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, அது படுதோல்வியில் முடிந்ததுதான் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்றும் கைஃப் சுட்டிக்காட்டினார்.
"அவர்கள் ஏற்கெனவே ஜடேஜாவை கேப்டனாக்கிப் பார்த்தார்கள். அவரால் சமாளிக்க முடியவில்லை. தலைமைப் பொறுப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. பாதியிலேயே தன்னால் முடியாது என்று கூறிவிட்டார். நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தோனி சகாப்தத்திற்குப் பிறகு அணியை வழிநடத்தக்கூடிய ஒரு வீரரைக் கொண்டு வருவதற்காக, ஜடேஜாவை தியாகம் செய்ய தோனி விரும்புகிறார்" என்று கைஃப் விளக்கினார்.
ராஜஸ்தான் அணிக்குச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு, ரவீந்திர ஜடேஜா, தோனி, தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
"ஜடேஜாவின் விருப்பத்தை அறிந்துகொள்ள தோனியே நேரடியாக இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜடேஜா ராஜஸ்தான் செல்ல ஒப்புக்கொண்ட பின்னரே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன" என்று இது தொடர்பான ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், திரைக்குப் பின்னால் பல தொலைபேசி அழைப்புகள் நடந்திருக்கும் என கைஃப் கூறினார். "சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வில் இணைவது உறுதியானால், அவர் நிச்சயம் போன் செய்திருப்பார். 'தோனி பாய், என்ன நினைக்கிறீங்க?' என்று சஞ்சு, தோனியிடமே பேசியிருக்கலாம். சிஎஸ்கே அணியை நடத்துவதே தோனிதான். இந்த முறை சிஎஸ்கே-வுக்கு சஞ்சு தேவை என்றால், அவர்தான் அந்த அணியின் எதிர்கால கேப்டன்" என்று கைஃப் ஆணித்தரமாகக் கூறினார்.
ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் போன்ற மற்ற இந்திய விக்கெட் கீப்பிங் தேர்வுகளை விட, சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஸ்டைல் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். "சஞ்சு சாம்சனின் பேட்டிங் பாணி, அவரை சென்னை ஆடுகளத்தில் நிச்சயம் வெற்றி பெற வைக்கும். அவர் 3-வது அல்லது 4-வது இடத்தில் களமிறங்கி, மிடில் ஓவர்களில் சிக்ஸர்களைப் பறக்கவிடும் திறன் கொண்டவர்" என்று அவர் கூறினார்.