மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கும் இடையேயான நட்பு மற்றும் களத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏராளம். அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தோனி தன்னை "கேர்ள்பிரெண்ட்" குறித்து கிண்டலடித்ததன் பின்னணி என்ன என்பதை ஸ்ரீசாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலகலப்புடன் பகிர்ந்துள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் 2010ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது நடந்தது. பிரக்யான் ஓஜா பந்துவீசிக்கொண்டிருந்தபோது, ஃபீல்டிங்கில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீசாந்தை தோனி ஸ்டம்புக்குப் பின்னாலிருந்து சத்தமாகக் கிண்டலடித்தார்.

ஃபீல்டிங் பொசிஷனுக்குச் சரியாகச் செல்லும்படி அறிவுறுத்திய தோனி, "உன்னோட கேர்ள்பிரெண்ட் அங்கே இல்லை, இங்கே வந்து நில்லு" என்று கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இந்த வீடியோ அப்போது மிகவும் பிரபலமானது.
தோனி ஏன் அப்படி கூறினார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், சுமார் 15 ஆண்டுகள் கழித்து, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த் அதற்கான காரணத்தை சிரிப்புடன் விளக்கியுள்ளார்.
அந்தப் பேட்டியில் ஸ்ரீசாந்த் கூறியதாவது: "அந்த நாட்களில் எனக்கு நிறைய பெண் தோழிகள் இருந்தனர். அதனால், நான் செல்லும் ஒவ்வொரு மைதானத்திலிருந்தும் ஒரு தோழியைப் பிடித்து விடுவேன் என்று தோனி நினைத்திருக்கலாம்" என்று கலகலப்பாக பதிலளித்தார். தனது ஆஃப்-ஃபீல்ட் வாழ்க்கைதான் தோனியின் அந்த கிண்டலுக்கு காரணமாக இருந்திருக்கும் என்பதை ஸ்ரீசாந்த் இதன் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய இரண்டு பெரிய தொடர்களையும் வென்ற இந்திய அணியில் தோனியின் தலைமையில் ஸ்ரீசாந்த் விளையாடினார். இரண்டு தொடர்களிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். தனது திறமையை வெளிக்கொண்டு வர தோனி தனக்கு மிகவும் உதவியதாக ஸ்ரீசாந்த் அதே பேட்டியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். "எனது உண்மையான திறமை என்ன என்பதை எனக்குப் புரிய வைத்த ஒரே கேப்டன், ஒரே நண்பர் தோனிதான்" என்றும் அவர் கூறினார்.
தங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தாலும், ஒரு கேப்டனாக தோனி எப்போதும் அணிக்குத்தான் முன்னுரிமை கொடுத்தார் என்றும் ஸ்ரீசாந்த் புகழ்ந்துள்ளார். கிரிக்கெட் களத்தில் நடந்த இந்த ஜாலியான நிகழ்வையும், அதன் பின்னணியில் இருந்த சுவாரஸ்யமான காரணத்தையும் ஸ்ரீசாந்த் தற்போது பகிர்ந்துள்ளது, தோனி ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது.