மும்பை: இந்திய முன்னாள் கேப்டன் தோனி பயன்படுத்திய Process என்ற வார்த்தையை ஹர்திக் பாண்டியாவும் பயன்படுத்தி தோல்விக்கு விளக்கம் அளித்ததை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் காட்டமாக விமர்சித்துள்ளார்.
"Process is more more important than result. The Result is just a by-product of the Process" தோல்வியின் போது தோனி அளித்த அற்புதமான விளக்கங்களில் இதுவும் ஒன்று. 2020ஆம் ஆண்டு சென்னை அணி தோல்வியை சந்தித்து வந்த போது, மிக ரசிகர்களை கையாண்டார். வெறும் வாய் வார்த்தைகளோடு மட்டுமல்லாமல் அடுத்த சீசனிலேயே அணியை உருவாக்கி வெற்றியும் பெற்றார்.

அதுதான் தோனி. வெறும் சொல்லோடு நிற்காமல், செயலிலும் செய்து காட்டுபவர். ஆனால் இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வியின் போது ஒவ்வொரு முறையும் தோனியின் வார்த்தைகளை வைத்து ஏமாற்றி வருவதாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடர் தோல்வி குறித்து வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், இந்திய வீரர்கள் தங்களின் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றிக்கான பசியோ, தீவிரத்தன்மையோ இல்லாமல் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். அதேபோல் கேப்டன் என்ன செய்வதென புரியாமல் களத்தில் செயல்படுகிறார். பவுலர்களால் பேட்டிங் செய்ய முடியாது, பேட்ஸ்மேன்களால் பவுலிங் செய்ய முடியாது என்கிறார்.
நமக்கு சாதகமான வீரர்களை தேர்வு செய்வதை விட்டு, கண்களை மூடி திறமையான வீரர்களை தேர்வு செய்யுங்கள். தோல்வியடையும் போது ஒவ்வொருவருக்கும் பொறுப்பும், கணக்கும் உள்ளது. Process உள்ளிட்ட வார்த்தைகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தோனி சொல்லிய வார்த்தைபடி செயல்பட்டார். ஆனால் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் வெறும் வார்த்தைகளாக பயன்படுத்தி வருகின்றனர். அணித் தேர்வில் கூட சீரான தன்மை இல்லை.
இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகவும் சுமாரான அணியாகவே உள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதிபெறாத ஒரு அணியிடன் இந்தியா தோல்வியடைந்திருப்பதை பார்க்காமல், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் ஹர்திக் பாண்டியா பேசி இருக்கிறார் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.