மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2025 ஐபிஎல் தொடருக்கு பிறகு ஓய்வில் இருந்தாலும், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றின் காணொளி சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலானதை அடுத்து, இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
அதில், தனக்கு வேண்டிய வீரர்களுக்கு மட்டும் தோனி ஆதரவளித்ததாக இர்ஃபான் பதான் சூசகமாகத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் தோனி அமைதி காப்பது, அவரது குற்ற உணர்ச்சி மனப்பான்மையைக் காட்டுகிறது என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் கடுமையாகச் சாடியுள்ளது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 'ஸ்போர்ட்ஸ் தக்' யூடியூப் சேனலுக்கு இர்ஃபான் பதான் அளித்த பேட்டியின் ஒரு பகுதி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பேட்டியில், 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது, தனது பந்துவீச்சு குறித்து அப்போதைய கேப்டன் தோனி அதிருப்தி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதாகவும், அதுகுறித்து தோனியிடமே நேரடியாகக் கேட்டதாகவும் பதான் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு தோனி, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கிறது" என்று பதிலளித்ததாக பதான் கூறினார். மேலும் அந்த பேட்டியில், "யாருடைய அறைக்காவது சென்று ஹூக்கா தயார் செய்து கொடுக்கும் பழக்கம் எனக்கில்லை. ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை களத்தில் சிறப்பாக செயல்படுவது மட்டுமே, அதில் தான் நான் கவனம் செலுத்தினேன்" என்று பதான் கூறியிருந்தார்.
தோனி சக வீரர்களுடன் ஹூக்கா புகைப்பார் என்பது ஏற்கனவே பல வீரர்களால் சொல்லப்பட்ட ஒன்றுதான். அந்த வகையில், தோனியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், பதானின் இந்தக் கருத்து, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தோனி வாய்ப்பளித்தார் என்பதை மறைமுகமாகச் சுட்டுவதாகக் கருதப்படுகிறது.
இந்த சர்ச்சை மீண்டும் எழுந்த நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார். "இது இர்ஃபான் பதான் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் போன்ற பலரும் தோனியால் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். ஹர்பஜன் சிங்கை, கறிவேப்பிலையைத் தூக்கி எறிவது போல அணியிலிருந்து நீக்கினார்கள். தோனி ஏன் இப்படி செய்தார் என்பதை விசாரிக்க ஒரு நடுவர் குழுவை அமைக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "பதிலளிக்க விரும்பாதவர்கள் குற்ற உணர்ச்சி உள்ளவர்கள். தோனியைப் போலவே, கபில் தேவ், பிஷன் சிங் பேடி போன்ற கேப்டன்களும் வீரர்களை மோசமாக நடத்தி, பலரது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துள்ளனர். நம்முடைய கேப்டன்களாலேயே நம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணி அழிக்கப்பட்டது என்பதை நான் வெளிப்படையாகக் கூறுகிறேன்" என்று யோகராஜ் சிங் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை பெரிதான நிலையில், இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் புதன்கிழமை ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "ஐந்து ஆண்டுகள் பழமையான காணொளி, தற்போது தவறான சூழலில் திரிக்கப்பட்டு வெளிவருகிறது. இது ரசிகர்களுக்கு இடையேயான சண்டையா? அல்லது பி.ஆர் லாபியின் வேலையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒரு ரசிகரின் கிண்டலான கேள்விக்கு பதிலளித்த பதான், "நானும், தோனியும் ஒன்றாக அமர்ந்து ஹூக்கா பிடிப்போம்" என்று நகைச்சுவையாகக் கூறி இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று இருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து தோனி தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை. அவரது மௌனம், யோகராஜ் சிங் கூறுவது போல குற்றத்தை ஒப்புக்கொள்வதாக உள்ளதா அல்லது இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அவர் நினைக்கிறாரா என்பது போகப் போகத்தான் தெரியும். இருப்பினும், இந்த "ஹூக்கா சர்ச்சை", இந்திய கிரிக்கெட்டின் இருண்ட பக்கங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.