
சர்ச்சை பேட்டி
இந்த நிலையில், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது இர்பான் கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தன்னால் தான் முற்றுப் பெற்றது என சர்ச்சை கிளப்பும் வகையில் பேட்டி அளித்து இருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் கடைசியாக 2012-13ஆம் ஆண்டில் தான் நடந்தது. அப்போது இந்தியா வந்த பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியது.

நான்கு முறை கம்பீர் விக்கெட்
அப்போது கௌதம் கம்பீர், பாகிஸ்தான் அணியின் ஏழு அடி வேகப் பந்துவீச்சாளர் முகமது இர்பானின் பந்துவீச்சில் நான்கு முறை ஆட்டமிழந்தார். இர்பானின் உயரம் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் அப்போது தடுமாறினர்.

இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்
அதன் பின் கம்பீர் டி20 அணியில் வாய்ப்பு பெறவில்லை. இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஆடினார். அதுவே அவரது கடைசி தொடர். அந்த தொடரில் ஒரு அரைசதம் அடித்தும், அதன் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கிரிக்கெட் அரசியல்
கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை பாதியில் தடைபட்டது என்று தான் கூற வேண்டும். அதற்கு கிரிக்கெட் அரசியல் தான் காரணம் என அப்போது முதல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கம்பீரும் அதை பலமுறை இலைமறை, காய்மறையாக கூறி இருக்கிறார்.

இர்பான் என்ன சொன்னார்?
இந்த நிலையில், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது இர்பான் 2012-13 இந்தியா - பாகிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் தன் பந்துவீச்சில்
திணறியதை பற்றியும், கம்பீர் ஒருநாள், டி20 கிரிக்கெட் வாழ்க்கையை தான் முடித்தேன் என்றும் பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

பேட்டிங் செய்ய சிரமம்
இர்பான் கூறுகையில், "நான் இந்திய அணிக்கு எதிராக ஆடும் போது அவர்கள் எனக்கு எதிராக பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். சிலர் 2012 தொடரின் போது உயரம் காரணமாக என் பந்தை சரியாக கணித்து ஆட முடியவில்லை என்றும், பந்து வரும் வேகத்தை சரியாக கணிக்க முடியவில்லை என்றும் கூறினார்கள்" என்றார்

பதற்றமாக இருந்தார் கம்பீர்
கம்பீர் போட்டியில் என்னை சந்திக்கவே விரும்பவில்லை. இரு அணிகளும் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது அவர் என் கண்களை பார்க்காமல் சென்றார் என்று எனக்கு தோன்றியது. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 2012 தொடரில் நான் அவரை நான்கு முறை ஆட்டமிழக்கச் செய்தேன். அவர் எனக்கு எதிராக பதற்றமாக இருந்தார்" என்றார்.

பாராட்டினார்கள்
சிலர் என்னைப் பார்த்து பயப்படுகிறார் என நான் சொல்ல மாட்டேன். ஆனால், கம்பீர் கிரிக்கெட் வாழ்வை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முடித்து வைத்தது நான் தான் என மக்கள் என்னைப் பாராட்டுவார்கள் என்று கூறி அதிர வைத்தார் இர்பான்.

கம்பீர் - அப்ரிடி சர்ச்சை
ஏற்கனவே, கம்பீர் - ஷாஹித் அப்ரிடி இடையே இணையத்தில் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இருவரும் கிரிக்கெட் தொடங்கி காஷ்மீர் வரை மோதி வருகிறார்கள். கம்பீர் அரசியலில் குதித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி இருக்கிறார். இந்த நிலையில், அவரை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்து இருக்கிறார் முகமது இர்பான்.


Click it and Unblock the Notifications











