மும்பை : 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணியில் திடீரென்று நவதீப் சைனி எப்படி வந்தாரோ அதேபோல் முகேஷ் குமாரை பிளேயிங் லெவனில் சேர்க்க தற்போது காய் நகர்த்தப்பட்டு வருகிறது.
நவதீப் சைனியை சேர்த்ததே ,தவறான முடிவு என்று பலரும் விமர்சித்த நிலையில் தற்போது முகேஷ் குமார் அப்படி என்ன செய்தார் என்று தெரியவில்லை. தொடர்ந்து 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் திறனோ, பேட்ஸ்மேனை நிலை குலைய வைக்கும் அம்சமோ எதுவும் இல்லை.

ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் யாக்கர்களை நன்றாக வீசினாலும் அவருடைய பந்துவீச்சில் ரன்கள் அதிகமாக தான் சென்றது. உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட வைத்துவிட்டு அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு விட்டார் என்று கூறி அவரை உலகக்கோப்பை தொடரில் சேர்க்க முடிவெடுப்பதெல்லாம் 2023 ஆம் ஆண்டின் சிறந்த காமெடியாக தான் கருதப்படும்.
இந்த நிலையில் முகேஷ் குமாரை எதற்கு பயன்படுத்தினீர்கள் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் முகேஷ் குமாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகமும் கேப்டனும் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் முக்தேஷ் குமார் எந்த ரோலில் பயன்படுத்தப்படுகிறார் என்று யாருக்குமே தெரியவில்லை. அவர் ஒரு பவுலராக அணிக்கு என்ன வேலையை செய்யப் போகிறார் என்பது குறித்தும் ஒரு தெளிவும் இல்லை.
என்னைப் பொறுத்தவரை ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு நீங்கள் புது பந்தில் சில ஓவர்களிலும் இறுதி கட்டத்தில் சில ஓவர்களிலும் வழங்க வேண்டும். அதன் பிறகு ஒரு கட்டத்தில் முகேஷ் கடைசி கட்டத்தில் நன்றாக பந்து வீசுகிறார் என்று முடிவுக்கு வந்து டி20 கிரிக்கெட்டில் கடைசியில் அவரை பயன்படுத்தி இருப்பார்கள் என நான் நம்புகிறேன்.
டி20 கிரிக்கெட்டில் அவருக்கு முழு நான்கு ஓவர்களையும் கொடுக்கவில்லை.
அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதே சமயம் முகேஷ் குமார் பந்துவீச்சில் பெரிய அளவில் தன்னுடைய திறமையை காட்டவில்லை. அதற்கான வாய்ப்பையும் இந்திய அணி நிர்வாகம் ஏற்படுத்திக் தரவில்லை. ஆனால் கடைசி கட்டத்தில் நல்ல யாக்கர்களை வீசி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக செய்தார் என நான் நம்புகிறேன்.
கடைசி டி20 போட்டியில் அவருக்கு ஒரு ஓவர் வழங்கியதெல்லாம் எங்கே கொண்டு போய் சேர்ப்பது என்று தெரியவில்லை. இது போன்ற சமயத்தில் கேப்டன் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆர் பி சிங் கூறியுள்ளார்.