IPL 2026: "நான் பிறக்கும் முன்பே என் தந்தை..".. LSG வீரர் முகுல் சவுத்ரியின் உருக்கமான பேட்டி
கொல்கத்தா: ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் அதிரடி காட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தவர் 21 வயது இளம் வீரர் முகுல் சவுத்ரி. வெறும் 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அவருக்கு 'ஆட்ட நாயகன்' விருது வழங்கப்பட்டது. அப்போது தனது கிரிக்கெட் பயணம் மற்றும் வெற்றி ரகசியம் குறித்து முகுல் சவுத்ரி உருக்கமாகப் பேசினார்.
முகுல் கூறியதாவது: "நிஜத்தைச் சொல்லப்போனால் எனது கிரிக்கெட் பயணம் நான் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது. தனது மகன் ஒருநாள் பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்பது எனது தந்தையின் தீராத கனவு. ஆனால் அப்போது எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை அவ்வளவு சீராக இல்லை. அதனால் என்னால் சிறு வயதிலேயே கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்க முடியவில்லை. 12 அல்லது 13 வயதில் தான் நான் விளையாடவே ஆரம்பித்தேன்.

பயிற்சி பயணம்:
ஆரம்பத்தில் எங்களது பகுதியில் பெரிய கிரிக்கெட் அகாடமிகள் கிடையாது. அப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட எஸ்.பி.சி அகாடமியில் சுமார் 6 ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். அதன் பிறகு கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக ஜெய்ப்பூர் நகருக்குச் சென்றேன். கடந்த 4 ஆண்டுகளாக அங்கேயே தங்கியிருந்து தீவிரப் பயிற்சி பெற்று வருகிறேன். சமீபகாலமாக கிரிக்கெட் ஆட்டம் மிகவும் வேகமாகிவிட்டதை உணர்ந்தேன். அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க டில்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் சில மாதங்கள் தங்கியிருந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினேன். அது எனக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்தது.
தந்தையின் நம்பிக்கை:
உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) போட்டியின் போது தான், என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனது தந்தைக்கு வந்தது. அந்தப் போட்டியில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது, நான் மட்டும் சிறப்பாக ஆடி ரன் குவித்தேன். அதனை இப்போதும் எனது தந்தை பெருமையாகப் பேசுவார்.
வெற்றி ரகசியம்:
கடைசி நேரத்தில் பேட்டிங் செய்யும் போது நிச்சயம் அழுத்தம் இருக்கும். ஆனால் கடவுள் கொடுத்த வாய்ப்பாகவே இதனைப் பார்க்கிறேன். அழுத்தத்தை விட எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பையே நான் பெரிதாக நினைக்கிறேன். கடைசி வரை களத்தில் நின்றால் போட்டியை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனது 'ஜோன்' பகுதிக்கு பந்து வந்தால் அதனை அடித்து ஆட வேண்டும் என்பது மட்டுமே எனது திட்டம். மற்றதை நான் கடவுளிடமே விட்டுவிடுவேன்.
முதல் சிக்சர்
இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் என்னால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை. அதனால் இன்று அடித்த முதல் சிக்சர் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. அதன் பிறகு அடித்த ஹெலிகாப்டர் சிக்சரும் நன்றாக இருந்தது. பந்துவீச்சாளர் 4 பந்துகளை மிகச் சிறப்பாக வீசினாலும், ஒரு பந்து நிச்சயம் எனக்கு சாதகமாக வரும் என்று காத்திருந்தேன். அது கடைசி பந்தாக இருந்தாலும் சரி, அதனை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன். சிறு வயது முதலே அதிரடியாக விளையாடுவது தான் எனக்குப் பிடிக்கும்.
என்னை நாட்டின் எல்லை காக்கும் வீரர்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் நாட்டுக்காக எல்லையில் போராடுகிறார்கள். நான் இங்கே விளையாட்டில் எனது பங்கைச் செய்கிறேன் அவ்வளவுதான்." இவ்வாறு முகுல் சவுத்ரி பேசினார். முகுல் சவுத்ரியின் தன்னம்பிக்கையை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications