
மும்பை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியின் ஒரு சாதனையை, மும்பை அணி முறியடித்தது. ஆனால், சிஎஸ்கே ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மும்பையில் நடந்தது.

இதில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்களுக்கு சுருண்டது. தொடர் தோல்விகளால் திணறும் மும்பை அணி, சுலபமான இலக்குடன் களமிறங்கியது.
ஆனால், ஹைதராபாத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை திணறியது. பவர் பிளே எனப்படும், முதல் 6 ஓவர்களில், பீல்டர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், இந்த ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க முடியும்.
ஆனால், இன்றைய போட்டியில், முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதே ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் எடுத்ததே இந்த சீசனில் பவர் பிளேவின் போது மிகவும் குறைந்த ஸ்கோராக இருந்தது.
அந்த மோசமான சாதனையை, மும்பை முறியடித்துள்ளது. சிஎஸ்கே அணியிடம் இருந்த மோசமான சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதால், சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.